Thursday, December 15, 2011

அமைதி தேடி

ஒரு
நிறைவான
அமைதி தேடி
அலையும் நாட்கள்

ஏறத்தாழ
என்
நாட்காட்டியின்
எல்லா தேதியிலும்

ஒரு
பெரிதான
நிம்மதி வேண்டி
நாடும் உறவுகள்

ஏறத்தாழ
என்
எதிரி  வீட்டின்
இளைய உள்ளங்களிலும்

என்
பணிவுகள்
தலை குனிவாகவும்  
என்
கனிவுகள்
நிலை குலைவாகவும்

மனித
மனங்களில்
மனப் பாடமாக
சமுதாய
சட்டங்களில்
திட்ட வட்டமாக  

ஒட்டி ஒட்டி  
தீட்டப்பட்ட  
வட்டங்களுக்குள்   
எட்டி பார்க்கும்
எண்ணற்ற தலைகள்

இருந்த இடத்தில்
இருந்து கொண்டே
எட்டி தாவி
நாடு பிடிக்கும்
நல்ல ஆட்டம்

அரசு உடைமையில்
மட்டுமே
அனைவரும் ஒன்றாக
பொறம்போக்கு
நிலம் கூட
பலரிடம் பட்டாவாக

நட்ட நடு
காட்டில் மட்டுமே
என்
நியாய தர்மங்கள்

சத்தம் போட்டு
சொல்லும் போது
இலைகளில் 
சல சலக்கின்றன  

பகுத்தறிவு   
உலகத்தின் 
பாகப் பிரிவினை
பணக்கார
பிள்ளைகளுக்கு 

எஞ்சி இருப்பது
ஏழை குடிசைக்கான
கூவங்களின் 
இருபக்க கரைகள்
மட்டுமே 

இங்கே  
விட்டு கொடுப்பது
முட்டாள் தனம்
வாரி வழங்குவது
ஊதாரி தனம்

இன்று
எந்த செல்வமும்
இயற்கையிடம் இல்லை
எல்லோருடையே
எண்ணமும்
இன்னொருவன் சொத்தில்

எங்கே
என் அமைதி
யாரிடம்
என் நிம்மதி

ஒவ்வொரு
விடியலிலும்
வேண்டிக் கொள்கிறேன்
ஒவ்வொருவர்
முகங்களிலும்
தேடிப் பார்க்கிறேன்

ஒரு நாளாவது
பிறரை
வருத்தப்படுத்தாமல்
என்னை
மகிழ்விப்பதற்கு !

Wednesday, November 30, 2011

கழிவுகள்

ஆறாத வடு
என்னை
ஆரத் தழுவிக்  
கொண்டு சிரிக்கிறது

நேற்றைய நிகழ்வுகளை 
இன்றைக்கு  
நினைத்து பார்க்க
சொல்லி வெறிக்கிறது

வெறும் குப்பை
பெருகி கிடப்பதால்
எனக்கு
பொறுக்க தோன்றுகிறது

அறுசுவை பண்டம்  
அழுகி கிடப்பதால்
அருகில்
ஈக்கள் மொய்க்கின்றன

எரிக்க வேண்டும்
இல்லை
புதைக்க வேண்டும்
இறந்தவை அனைத்தையும்

இல்லையேல் -

இருப்பவை
துருவி  துருவி
துருபிடிக்க  
செய்து விடும்

அழுகியவை
ஒழுகி ஒழுகி
புழுபுழுத்து
போய் விடும்

புரையோடி கிடக்கிறது
எண்ணற்ற  புண்கள்
சிறைபட்டு கிடக்கிறது
கணக்கற்ற மனங்கள்  

துருக்களும்
புழுக்களும்
தொல்லை தர 
தொடங்கி விட்டன

வீதியில் போட்ட
எச்சில் இலையை  
வாசலில் எறியும்
தெரு நாய்கள் 

தெருவில் கலக்கும்
சாக்கடை கிருமியை
இரத்தத்தில் ஏற்றும்   
கொசுக்களின் விளையாட்டு 

கழிவுகள்
கழிக்கப் பட
வேண்டியவை அல்ல
அழிக்கப் பட
வேண்டியவை

ஏழைக்கும் 
எதிரிக்கும்
கழிவுகள்
ஊட்டப்படுவதால் தான்
உலகம்
அழிவை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது !

தெறிவின் ஓரத்தில்

உடைந்து விழும் 
உன்
உயிரின் வாழ்வை
ஒரு
சில் வண்டின்
ஓசை
உயிர்த்தெழ செய்யும்  

கவிழ்ந்து விழும்
உன்
கனவின் ஆசையை
ஒரு
கண்ணாடி துண்டு
காப்பாற்றி விடும்

கடிகார
சத்தம் கூட
கவலைகள்
மறக்கச் செய்யும்
காதின் ஓரத்தில்

காகித
அசைவு கூட
இசைவுகளை 
இயற்றி விடும்
இதய கூட்டுக்குள்

நீரின்
தொண தொணப்பு
நிலத்தின்
கலங்களின் மேனியை
நெகிழச் செய்யும்

காற்றின்
சுறு சுறுப்பு
கரையின்
ஓரங்களின் ஆரத்தை 
தூரமாக்க துடிக்கும்   

ஒரு
பருந்தின் அந்தரத்தில்
பறக்க விடப்படும் 
அற்ப எண்ணங்கள்

ஒரு
குரங்கின்  வாலில்
பட்டாசை  கொளுத்தும்
குறும்பு சிந்தனைகள்

நடக்க 
சாத்தியப் படாத
நொண்டி கனவுகள்
வண்டி  கட்டும்
வாழ்க்கை பயணத்திற்கு

இருட்டு பாதையில்
குருட்டு நம்பிக்கை
தெரு விளக்கை
ஏற்றி விடும்
திருவிழா தோரணம்
கட்டி விடும்

மிரட்டும்  உலகில்  
முரட்டு குணங்கள்
திருட்டு  தனங்களை
விரட்டி விடும்
திறமை  அனைத்தையும் 
வளர்த்து  விடும்  

எரிந்து விழும்
வரை 
ஒரு நட்சத்திரம்
எரிந்து
கொண்டே இருக்கும்

விழுந்து எழும்
வரை
மனிதனின் வாழ்க்கை
விழுந்து
கொண்டே  இருக்கும்

அகல் விளக்கின்
திரியை சுடும்
நெருப்பு தான்
ஒளி கொடுக்கும்

அடி மனதில்
வலியை தரும்
கேள்வி தான் 
வெற்றியின்
விடையை கொடுக்கும் !




Saturday, October 1, 2011

அடிமை தலைகள்

சிந்திப்பதற்கு
சற்று
சிரமமான கருத்து

நிந்திப்பதற்கு
முற்றும்
மாறுபட்ட உண்மை

எந்தவொரு
தவறும் செய்யாமல்
ஏழை
உருவாக்கப் படுகிறான்

ஏழை
என்ற காரணத்தால் 
சகமனிதன்
அடிமையாக்கப் படுகிறான்

வாழ்க்கை ஓட்டத்தில்
பின் தங்கியவர்கள்
எல்லாம்
பிச்சைகாரர்கள் ஆகின்றனர்

வீரர்கள் மட்டுமே 
ஓடத் துணிந்தவர்கள்
என்பதை
உணர்ந்தும் மறக்கிறார்கள் 

இல்லாதவனுக்கு
பிறந்து
ஏழையானவன்

இயலாமை
வந்து
ஊனமானவன்

இருவரும்
இயற்கையால்
ஏமாற்றப்பட்டவர்கள்

இருப்பதை
இழந்து
இல்லாதவன் ஆனவன்

நேர்மையுடன்
ஏமாந்து
வறுமைக்கு வந்தவன்

இருவரும்
ஊர் உலகத்தால்
ஏமாற்றப்பட்டவர்கள்

ஏற ஏற
எட்டி உதைக்கும்
மேலோர்கள்

சறுக்க சறுக்க
ஏறத் துடிக்கும்
ஏழை பங்காளி

தவறோ சரியோ
தன் நிலையை
நிறுத்திக் கொள்ள

நல்லதோ கெட்டதோ
தன் எதிரியை
வீ ழ்த்தி விட

நாவிற் குள்ளே
விடம் வைத்து
நடப்பவர் கோடி

நாகத் தீண்டலை 
விட கொடியது
கொட்டும் வார்த்தை

ஏழை பணக்காரன்
போட்டி நடக்கிறது
நீயா நானா
போட்டி ஆரம்பமாகிறது

மூலதனம்
பதுக்கப் படுகிறது
முறை கெட்ட
ஆட்டம் நடத்தப்படுகிறது

எளியவன்
ஏமாற்றப்படுகிறான்
வலியவன்
ஏமாற்றத் தொடங்குகிறான்

இறுதிவரை
தொடர்ந்து நடக்கிறது
ஏழையாகவே
ஒருவன் இறப்பதற்கு

ஒரு  கட்டத்தில்

தாய் தந்தை
தமையன் தமக்கை
தான்
என்ற உலகம்

மறு கட்டத்தில்

தான்
தாரம் - தன்
மகன் மகள்
என்று மாறிவிடுகிறது

இறுதியில்

பேரன் பேத்தி
மருமகன் மருமகள்
என்று
விரிசலடைகையில்
விவரம் தெரிகிறது

சொந்தத்தையே
சந்தர்ப்பத்தில்
சேர்த்து கொள்ளும்
முட்டாள் மனிதன்

சுற்றத்தை
எப்படி
சுகப்படுத்துவான்

சமுதாயத்தை
எப்படி
சமத்துவமாக்குவன்

சம நிலையில்
உள்ளவர்கள்
கூட்டாளி ஆகிறார்கள்

சம நிலையில்
இல்லாதவர்களை
கடனாளி ஆக்குகிறார்கள்

கொடுக்க
துணிந்தவனிடம்
பணத்தை
கூட்டி வாங்குகிறார்கள்

கொடுக்காமல்
பணிந்தவர்களிடம்
மானத்தை
கூட்டி வாங்குகிறார்கள்

மானபங்கம்
நடத்தப் பட்டதால்
நிகழ்ந்தது தான்
மகாபாரதம்

அடிமை சங்கிலியில்
தீட்டப்பட்டவை
தான்
அர்ஜுனனின் அம்புகள் !

Wednesday, August 24, 2011

சகோதரத்துவம்

நான் ஊமையாகி
எனக்குள் ஊனமாகி
நல்ல
பெயர் எடுக்க
எண்ணும் உள்ளங்கள்

உண்மை விரும்பியாகி
என்றும்  நேர்மையாகி
தனக்கு
இனியவனாக இருக்க
நினைக்கும்  உறவுகள்

உன்
வீட்டு வீதியை 
நான்
சத்தமில்லாமல்
கடக்க விரும்புகிறாய்

என் 
வீட்டு வாசலில்
நீ
சத்தம் போட்டு
நின்று செல்கிறாய்

உன்
கட்டளைகளை கேட்டு
நான்
அடி பணிந்து
நடக்க ஆசைப்படுகிறாய்

என்
கதறல்களை கண்டு
நீ
காது கேளாமல்
கடந்து போய்விடுகிறாய்

நான்
தலை குனிந்து
நடந்தால்
தம்பி என்கிறாய்

நான்
தலை நிமிர்ந்து
நடந்தால்
தறுதலை என்கிறாய்

நீ
பார்த்ததும்
நிற்க வேண்டும்
என்று
எதிர் பார்க்கிறாய்

உன்னை
பார்த்ததும்
பேச வேண்டும்
என்று
பழக சொல்கிறாய்

இருந்தும்
இல்லாமல் வாழும்
என்
இறுக்கமான வாழ்க்கை
பொருத்தமானது உனக்கு

என்றும்
நடை பிணமாய்
இருந்தால்
வருத்தம் கொடுக்காதவன்
நான் உனக்கு

என் வீட்டு
உணவு பொருட்கள்
நீ
வாங்கும் கடையில்
இருப்பது உண்மை

என் வரிசை
உனக்கு பின்னால் 
எப்போதும்
இருந்திட நினைப்பது
என்ன கொடுமை

உனக்கும் எனக்கும்
உயிர் வாழும்
காலம்
ஒன்று தான்

நீயும் நானும்
இருக்க வேண்டிய
உலகம்
ஒன்று தான்

உனக்காக
விட்டு கொடுக்கும்
தண்டனையாய்
எனக்கான
வயதை இழக்கிறேன்

உனக்காக
இடத்தை பறிக்கும்
பாதகமாய்
எனக்கான
உலகை மறுக்கிறாய்

இப்படி
ஒரு வாழ்க்கையில்
எப்படி
இணைந்தோம் இருவரும்

எப்படியும்
ஒரு தாயின்
வயிறு தான்
உலகத்தின் சூட்சமம்

அதுப்படி
அண்ணன் தம்பி
பிரிவு தான்
உறவுகளின்  ஆரம்பம்

என்றாவது
நினைத்து பார்த்ததுண்டா
என்னை
உன் சகோதரனாக

என்றுமே
எண்ணுவது என்ன
நான்
உனக்கு சகோதரனாகிட !


Wednesday, August 17, 2011

நயவஞ்சகம்

விழிகளில் வரும்
நடுக்கம்
வார்த்தைகளில் வரும் 
தடுமாற்றம்

புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்

உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை

நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்

உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்

உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்

கொஞ்சல்
அஞ்சி  அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்

குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு

முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்

கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்

நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்

நேர்மை
நேரத்திற்கு  நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின் 
வாழ்க்கையில் தான்

சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை

சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்

விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்

புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து

மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்

அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !

Sunday, August 7, 2011

உங்கள் விமர்சங்களுடன் நமது முதல் புத்தக படைப்பு

அன்பு நண்பர்களே

எனது இடைவிடாத வேலை பளு என் எழுத்து பணியில் சிறிது இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது . இப்போது எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் என் தந்தைக்கு அறுபத்தியொரு கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன்  . ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை இருபத்தி எட்டாக குறைத்து விட்டு ( கண்ணீர் முத்துக்கள் 28 ) இதர தத்துவ கவிதைகளை இணைத்து ( கற்ற தத்துவங்கள் 61 ) கண்ணீர் அஞ்சலியுடன் ( அஞ்சலி 1 ) கட்டளைகள் பத்தாக ( கட்டளைகள் 10 ) என் முதல் தொகுப்பை வெளியிடும் வேலைகளை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க நினைக்கிறேன் .

அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் , நீங்கள் தான் எனது முதல் விமர்சகர்கள் , உங்களின் பங்களிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் . என்னால் முடியும் என்றால் உங்கள் அன்பு கரங்களின் ரேகை அச்சுகளையாவது என் புத்தகத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கு

1. உங்களுக்கு பிடித்த என் கவிதைகளை வரிசைப்படுத்தி உங்கள் கருத்துகளை, வாழ்க்கை நினைவுகளுடனான என் கவிதை தாக்கங்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நம் அழகு தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள். ரத்தின சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் . தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.

2. என் கவிதைகளுக்கான கருத்துகள் நிறைந்த புகைப்படங்கள் உங்களிடம் இருக்கும் என்றால் அதைபற்றிய வில்லங்கம் இல்லாத (copy write issue ) விளக்கங்களுடன் எனக்கு அனுப்புங்கள் . எந்த கவிதைக்கான புகைப்படம் என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள். தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.

எனது email address: visvatamil@gmail.com

உங்கள் அனைத்து எண்ணங்களையும் எனக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புகள் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் இனிய நண்பன்.

Saturday, August 6, 2011

சிறை பறவை

சிறைப்பட்டு கிடக்கும்
என்
சட்ட விரோத
சாமானிய சிந்தனைகள்

அடைப்பட்டு கிடக்கும்
என்
அறிவுக்கு புறம்பான
ஆசைக் கனவுகள்

சந்தர்ப்ப சூழல்களில்
சத்தமின்றி
தலை காட்டும்
தவறான எண்ணங்கள்

சம்மதம் கிடைத்தால்
சத்தியமாக
மொத்தமாய் மூழ்கடிக்கும்
மூர்க்கக் குணங்கள்

புரையோடிய புண்கள்
ஆறாத வடுக்கள்
என்
உடலின் பலவீனம்
உள்ளத்தின் சுகவீனம்

தத்திதத்தி நடக்கிறேன்
தவறெது சரியெது
என்ற
சந்தேகம் கொண்டு

தடுமாறி விழுகிறேன்
தடவி எழுகிறேன்
நடை
பாதை பழக்கமின்றி

ஆசைக்கும் பேராசைக்கும்
அடமானம் வைக்கிறேன்
என்
அறிவையும் தெரிவையும்

நன்மையும் தெரியும்
உண்மையும் தெரியும்
நம்பிக்கை நாணயம்
நன்றாக தெரியும்

கணநேர நினைவுகள்
என் கனவுகள்
அழிக்கும் அவலம்
அனைத்தும் அறிவேன்

விடுதலை புதிர்
விடுபடாத புதர்
காடாய் தெரியும்
கேடின் சிறை

சிறைக் கம்பிகளுக்கு
இடையே
அறையப்பட்டு நிற்கும்
குற்றவாளி கைதி

காவல் அதிகாரியாய்
கவனித்து கொண்டு
இருக்கும்
கம்பிகளின் மறுபக்கம்

இருபுறமும் தெரிகிறேன்
ஒரே உருவத்தின்
வெவ்வேறு பிம்பங்களில்
மாறுபட்ட மனிதனாய்

யாரிடம் உள்ளது
பூட்டை திறக்கும்
சாவி
புரியவில்லை எனக்கு

பொறுமை கடந்தால்
பூட்டிய கதவுகள்
உடைக்கப் படுமா
விடையில்லை இன்னும்

எல்லை மீறி
எல்லாம் முடிந்ததும்
எண்ணிப் பார்த்து
திகைக்கிறேன்

எப்போது பறந்தது
என்
சிறைப்பறவை
சட்டத்தை உடைக்க

மீண்டும் அடைத்து
விட்டு
விழித்து நிற்கிறேன்
என்று பறக்குமென்று !

Thursday, July 21, 2011

எந்தையே - 31

நேர்த்தி கடனாக

நீண்ட தாடி - நல்ல

நேரம் தவறாமல்

சிறந்த படையல்


அப்பனே முருகா

என்று

அன்றாடம் வணங்கி

மன்றாடும் விழிப்பு


திருப்பம் தேடி

திருப்பதி தரிசனம்

திருமால் அருளுக்கு

திருமலை ஏற்றம்


பழனி ஆண்டிக்கு

பக்தி மொட்டை

பால முருகனுக்கு

பரவச காவடி


ஆபத்து காத்த

விநாயகர்

அருள் வழங்க

அன்றாடம் பால்


அர்ச்சனை தட்டுடன்

உண்டியல் காணிக்கை

மூன்று முறை

வேண்டுதல் வலம்


வேதனை வந்தும்

சோதனை என்றாய்
விதியால் நொந்தும்
வேலனே என்றாய்

துணைக்கு ஆளின்றி
தெய்வத்தை நாடினாய்
தனிமையில் நின்றபடி
தண்டம் பணிந்தாய்

சிறு பிரிவுகளில்
திருநீறு பூசினாய்
மறக்காமல்
மடித்து கொடுத்தாய்

புது தொடக்கத்தில்
புகைப்படம் வைத்தாய்
பூசை அறையில்
புத்தகத்தை வைத்தாய்

துன்பம்
தீர்ந்திட பூசை
இன்பம்
சேர்ந்திட ஆசை

மகன்
படித்திட கோரிக்கை
வேலை
கிடைத்திட காணிக்கை

பால் தொழிலை
நிறுத்திய பின்னும்
காலை தவறாமல்
கடவுளுக்கு படைத்தாய்

கண்காணாத இடத்தில்
கடமை ஆற்றும்
கடைசி மகனை
கண்ணிமையாய் காத்திட

என்ன செய்தான்
உன் இறைவன்
என்ற கவலை
என்று தோன்றியது

உன் மகன்
தனிமையில் நிற்கிறான்
என்ற நிலைமை
என்று தெரிந்தது

முன்னேற்ற தடைகள்
என்னை
பின்னோக்கி இழுப்பதை
கண்ணால் கண்டாயோ

கடவுளே கடவுளே
என்றாலும்
காரியம் நடக்காததை
அறிந்து கொண்டாயோ

உன்னையே இழந்து
எனக்கு
ஒரு தெய்வம்
ஆகிவிட்ட எந்தையே

இருந்து செய்த
கடன் பெறாமலே
இறந்து செய்ய
புறப்பட்டது ஏன் !

Monday, July 18, 2011

எந்தையே - 30

எந்தையே
என் சிந்தையில்
தோன்றும் பாக்கள்
பிதற்றல் அல்ல

என்றும் 
என்னுடன் இருக்கும்
உனக்கு - நான்
தூவும் பூக்கள்

நண்பன் கூட
கேட்கலாம்
என்ன இலாபம்
என்று 

நான் உனக்கு
மகனாய் பிறந்ததால்
தான்
அவனுக்கு  நண்பனானேன்

நாளை
சுற்றம் வந்து 
சொல்லலாம்
சும்மா இருவென்று

உன்னை  போல்
ஒரு தந்தையாய்
இருக்க
முடியாதவர்கள் 

என்னை போல்
ஒரு மகனை
ஈன்றெடுக்க
நினைக்காதவர்கள்

சுற்றும் உலகம்
சற்றும் சிந்திக்காமல்
புத்தி கெட்டவனென்று
புறம் தள்ளலாம்

சுந்தர தமிழில்
எந்தையின் சாதனைகள்
சந்தங்கள் கலந்து
சிந்தைகள் மயக்கும்

தந்தையும் மகனும்
தத்தமது
தவறுகள் திருத்தி
தியாகத்துடன் நடப்பர்

தன்னால மனிதர்கள் 
தன்னிலை மறந்து
கணப் பொழுது
நினைத்து பார்ப்பார்கள்

ஒவ்வொரு
தந்தைக்கு பின்னும்
ஒரு மகன்
உருவாக காத்திருக்கிறான்

ஒவ்வொரு
மகனின் உழைப்பும் 
ஒரு தந்தையின்
விருப்ப ஓய்வுக்கென்று

நேற்று
வணங்கிய  கடவுள்
இன்று
வணங்காத கடவுள்

என்னை
சோதித்து பார்த்து
தினம்
வேதனை மூட்டலாம்

உன்னை
காப்பாற்றி இருந்தால் 
உண்மையில்
உலகில் இருந்தால்

உணர்ந்து
கொள்ள முடியும்
என் - கவிமாலை
கடவுளுக்கே என்று !

எந்தையே - 29

உன்
இறுதி காலங்கள்
என்னை
இம்சை  செய்கிறது 

உன் 
கந்தல் கோலங்கள்
என்னை
கண்ணீரில் நனைக்கிறது 

என்
சம்பாத்தியத்திற்கு பின்னும்
உனக்கு 
சந்தோசம்  இல்லை

நீ
நிம்மதி அடைந்திடும்
வண்ணம்  -  நான்
தலையெடுக்க  வில்லை

தலை வாரிட
நேரம் இன்றியும்
உடை மாற்றிட
உள்ளம் இன்றியும்

தனி ஒருவனாக
நின்று
தாங்கிய வலிகள்
சாமானியர்கள் சரித்திரம்

பெற்ற பிள்ளைகளின்
வாட்டம் அன்றோ
உன்னை
வாட்டி வதைத்தது

உற்ற சொந்தங்களின்
உதாசீனம் அன்றோ
உன்னை
உருக்குலைத்து விட்டது

முதல்
இரு பொத்தான்கள்
திறந்து கிடக்கும்
மறந்த  கோலம்

மீசையின்
நரை முடிகளை
கடித்து  நிற்கும்
கடந்த  காலம்

கை பேசியை
கழுத்தில்
மாட்டி கொண்டு
மகிழ்ந்த நேரம்

கடிகாரத்தை
கையில்
கட்டிக் கொண்டு
கலக்கிய கம்பீரம்

எப்படியாவது
மீட்டுவிட எண்ணிய 
உன்
இளமைகால இதிகாசம்

சகோதரர்களிடமும்
சமுதாயத்திடமும்
முடித்திட துடித்த
உன் வனவாசம்

இரத்த அழுத்தத்தில்
உணர்ந்து கொண்டேன்
நீ
எத்தனை இன்னல்கள்
சுமந்தவன் என்று

இதயம் வெடித்ததும்
கனன்று நின்றேன்
நான்
இத்தனை சின்னவனாய்
இருந்தேனே என்று

என்றாவது ஒருநாள்
உன்னை
இன்னல் கலைந்த
இன்முகத்துடன் காண

எந்நேரமும் என்னை
சிந்தனையில்
இருத்திக் கொண்டு
சிடுசிடுத்தேன் உன்னிடம்

என்ன
சொல்வதென்று புரியாமல்
உனக்கு
ஒரு துன்பமும்
தரமாட்டேன் என்றாயே

இன்று
உன்னையே இழந்துவிட்டு
இன்னமும்
உன் கடனடைக்க
கண்ணீருடன் பணியாற்றுகிறேன் !

Sunday, July 17, 2011

எந்தையே - 28

ஒரு தந்தைக்கு
ஈடாகாத
பெரிய  உலகம்

எந்தையின் அன்புக்கு
இணை செய்யாத
விந்தை உலகம்

ஒரு நூறு
முறை
சிறுபிள்ளை
போன்று

கல்லூரி
செல்லும் வயதிலும்
கை அசைத்து
வழி அனுப்பினாய் 

ஒரே  ஒரு
முறை
உடன் வந்த
அடுத்த வீட்டுக்காரர்

வாசம் கூட
அறியாத
மதுக்கடை வாசலில்
காக்க வைத்தார்

விரட்டி விரட்டி
அடித்தாய் 
வடக்கு  வயலுக்கு
விளையாட சென்றதற்கு

நெல் வயலில்
வேலை பார்க்கும்
ஆட்களிடம்
வம்பு செய்ததே
விவசாய பாடம்

எலுமிச்சை  மரத்தின்
பழம் உலுக்குவது
பற்றி
எதுவும் தெரியாமல்

பக்கத்து வீட்டுக்காரரை
உதவிக்கு அழைத்தால்
வேலையிருகிறது என்று
விலகி செல்கிறார்

ஒவ்வொரு தந்தைக்கும்
மகனுண்டு
உயிருக்கு உயிராய்
உணர்வுகளை பகிர்ந்திட

அவரவர் வாழ்க்கையிலும்
ஆயிரம்
இன்னல்கள் உண்டு
இடைவிடாமல் உழைத்திட

எனது
வருத்தம் எல்லாம்
இவர்கள்
ஒவ்வொரு முறையும்

உனக்கு
துன்பம் தருகையில்
என்னை
ஏன்  மறந்தார்கள்

குற்ற உணர்வு
சிறிதும் இல்லாத
கொலை செய்யாத
குற்றவாளிகள் இவர்கள்

தகாத வார்த்தைகள்
பேசி
தற்கொலை செய்ய
தூண்டும் கொலைகாரர்கள்

சிறு சிறு
தவறென்று
தண்டனை இல்லாமல்
தலையை  கொய்யும்
தவறான  உறவுக்காரர்கள் 

தந்தையை இழந்த
மகனையும்
விட மாட்டார்கள்
மகனை இழந்த
தந்தையையும்
விட மாட்டார்கள்

தான் வாழ
தன்னை
சுற்றி உள்ளவர்களை
சொந்தமென்று சொல்லி
கொல்லும் களைகள் !

புன்னகை போதும்



புன்னகைத்து விடு
போதும்
பொன் நகை 
தேவையில்லை

கண்ணசைத்து விடு
போதும்
பண் இசைத்திடும் 
புண்பட்ட உள்ளம்

உயிர் வாழ
உழுது கொண்டிருந்த
உலகம்
மாறி விட்டது

வாழ்க்கை உயர
உழைக்க வேண்டிய
நேரம்
வந்து விட்டது

பொழுதுகள் நிறைந்த
பொழுது போக்குகள்
குறைந்த
பெற்றவர்கள் காலம்

சிறுக சிறுக
செல்வம் சேர்த்து
பெரிதாய்
வாழ்ந்த வாழ்க்கை

பொழுதுகள்  குறைந்த
பொழுது  போக்குகள்
நிறைந்த 
பிள்ளைகள் காலம்

வரவை தாண்டி
செலவு  நிற்கும்
சிரமமான
சிக்கன வாழ்க்கை

மோட்டார் வாகனத்தில்
ஊர்வலம் வரும்
அவசரத்தில்
கோயில் பூசாரி

மூடிய கதவை
திறந்து பார்க்க
நேரமின்றி
விடுமுறை ஓய்வு

உறவுகள் துறந்து
ஓடுகிறோம்
இரவுகள் மறந்து
உழைக்கிறோம்

அறிவியல் வளர்ச்சியில்
ஆயிரம் வசதிகள்
இருந்தாலும்
அசதியில் மறக்கிறோம்

அன்னை தந்தையின்
நலம் விசாரிக்க
அண்ணன் தங்கையின்
அன்பை பகிர

மனைவி
மக்களை கூட
துணைக்கு
அழைக்க முடியாத

தூர தேச
வாழ்க்கையில்
தொலைந்து போகும்
கனவுகள்

புதிய புன்னகைகளில்
மதங்களை
மறந்து விட்டு
உறவுகளை நாடுகிறோம்

பெரிய சிரமங்களில்
சடங்குகளை
துறந்து விட்டு
சம்பரதாயங்களை செய்கிறோம்

பொருள் ஆதாரம்
என்னும் பேரலையில்
புதைந்து போனது
பழமையான முறைகள்

மாடு கூட
குடிநீர் குழாயில்
தாகம்
தீர்க்க பழகுகிறது

நாய்  கூட
குட்டையான
வாலை - ஆட்ட
நேரமின்றி பறக்கிறது

ஆடி பண்டிகையில்
மூடிய  உணவகத்தை
அக்கறையுடன் சொன்ன
பெட்டிகடை காரரின்

வாழைப் பழத்தை
விட இனிமையானது
அவர்
வாஞ்சையுடன் சிரித்த
சிரிப்பு !

எந்தையே - 27

உலகம் தெரியாத
ஒரு பிள்ளை
உலகம் அறியாத
சிறு பிள்ளை

இரண்டுக்கும் நடுவில்
உறவுகள் தொல்லை
உடலினை கவனிக்க
இடைவெளி இல்லை

உன்னை கவனிக்க
உன்னிடமே 
கேட்டுக் கொண்ட
பக்தன் நான் 

என்னை நினைத்து 
அனுதினமும்
கவலை பட்ட
கடவுள் நீ

சிறை வாசல்
வரை
சுமந்து சென்றாய்
எங்கள் சிலுவைகளை

உயிர் மூச்சை
கொடுத்து
அவிழ்த்து விட்டாய்
மக்கள் சிக்கல்களை

பெரியதொரு
விருப்பம் இல்லை
பொறியியல்
படிப்பேன் என்று

அரியதொரு
வெற்றியை பெற்றாய்
ஊரின் - முதல் 
பொறியியல் பட்டதாரியாக்கி

ஊழ் வினையாக
எதிரிகள்
செய்வினையாக
கண் போகாவிடில்

இன்னொரு மகனையும்
இமயம்
ஏற்றி இருப்பாய்
என்போல் மாற்றியிருப்பாய்

விதி வலியாதாய்
நின்றது
எதிரிகள் நிறைந்த
உன்  வாழ்வில் 

விடா முயற்சியில் 
வென்றாய்
அன்னை உனக்கு 
துணையாய்  நிற்க

உன்னை யாரும்
தோற்கடிக்க  வில்லை
நீ யாரிடமும்
தோற்றிடவும் இல்லை

இறுதி வரை
உன்னை
விரட்டி வந்தார்கள்
மிரட்டி பார்த்தார்கள்

சிறுதும் அஞ்சாமல்
என்றும்
சிரித்து கொண்டே
சாதித்தவன் நீ

உன்னை சோதித்தவர்கள்
இன்று 
சொல்லிக் கொள்ளலாம்
தோற்கடித்து விட்டதாய்

மண்ணில் வாழும்
மனிதர்களுக்கே
வெற்றி தோல்வி - என்று
அறியாதவர்கள் அவர்கள்

என்னை  பார்த்து
சிலர்
ஏளனமாய் சிரிக்கலாம்
உன்னை இழந்ததால் 

உண்மை என்னவென்றால்
இனி தான்
ஆரம்பம்
என் வாழ்க்கை !

நடந்ததை மறந்துவிடு






மனதின் ஆசைகளை
நியாயப்படுத்த
போராடும்
அறிவின் ஆற்றல்

மூளை செல்களை
சலவை செய்ய
நினைக்கும்
உள்ளத்தின் ஆசை

மனித சமூகத்திடம்
மரியாதை பெற
துடிக்கும்
தன்மான எண்ணங்கள்

மரண தண்டனையை
மாற்றி போட
மன்றாடும்
உண்மை விரும்பிகள்

அநியாயத்திற்கு
அகராதியை அலசுகிறோம்
அநியாயம்  
செய்யவில்லை என்று

நியாயத்தின் 
பக்கங்களை காட்டுகிறோம்
நீதி
தவறியவர்கள்  என்று

சட்டத்தின் விதியை
உடைக்க  கூடுகிறோம்
கட்டுமானம் 
சரியில்லை என்று 

விதிகளை மீறுவதாய்
விளம்பரம் செய்கிறோம்
தீவிரவாத 
தீர்மானம் என்று

நீ
வாழும் நாட்கள்
உனக்கானது

நான்
வாழும் நாட்கள்
எனக்கானது

நாம்
வாழும் நாட்கள்
பொதுவானது

நம்
பிரிவுக்கு பின்னே
வரும் காலம்

நல்ல 
வாழ்க்கையில் தொடரும்
பொற்காலம்

நினைவுகள் என்னும்
நிகழ்வுகளின் 
கனவு பிம்பங்கள்

தற்காப்பிற்காக
தக்க வைக்கப்பட்ட
உயிரியல் தத்துவம்

உளவியல் காரணங்களை
உருபோடாதே
கலவியல் பற்றி
கற்பனை செய்யாதே

நேற்றைய வயதும்
நேற்றைய தினமும்
முடிந்து போன
உண்மை 

முடிந்த நினைவும்
முடிந்த கனவும்
நடக்க முடியாத
நிச்சயம்

உலகிற்கு
விளக்கம்  சொல்ல
அவசியங்கள்
எதுவும் இல்லை

மனதிற்கு 
ஆறுதல் சொல்லும்
முயற்சிகள்
தேவை இல்லை 

ஒவ்வொரு நாளும்
உனக்காக 
உறங்கி விழித்திடு

அன்றாட ஆசைகளை
அலுவலாய்
அனுபவித்து  விட்டு

ஒவ்வொரு நொடியும்
புதிதாய்
சிந்தித்து நடந்திடு

முடிந்த வினாடிக்கு
மவுன  அஞ்சலி 
செலுத்தி விட்டு !

Saturday, July 16, 2011

வெளிச்சத்தின் விழிகளில்


எப்போதும் 
இரண்டாகி போகிறேன் 
வெளிச்சத்தின் விழிகளில்..

இரவுக்கு
மட்டுமே தெரியும்
நான்
யாரென்ற உண்மை

உங்கள்
பார்வை பட்டு
இரண்டாக உடைகிறேன்

நான்
பங்கப்பட்டு
பகுதியாக பிரிகிறேன்

உங்களுக்கான
என்னை
முன்னால் நிறுத்துகிறேன்

நீங்கள்
வெளிச்சத்தின்
பின்னால் நிற்கும்போது

எனக்கான
உங்களை
எனதாக்க எண்ணும்போது

உங்கள்
வெளிச்சத்தை
மறைத்து விடுகிறேன்

வெளிச்சம்
என்னை
உலகுக்கு காட்டுகிறது

இரவு
உண்மையை
எனக்கு காட்டுகிறது

இருவரும்
ஒருவரை ஒருவர்
உருமாற்ற
முயற்சி செய்கிறோம்

இயற்கை
பரிணாமம் இல்லாமல்
நிறம்
ஏற்றி கொள்கிறோம்

உடை
மாற்றி கொள்கிறோம்
உடலை
மறைத்து கொள்ள

நடை
மாற்றி செல்கிறோம்
நாகரிகத்தை
வளர்த்துக் கொள்ள

முடி
திருத்தி கொள்கிறோம்
முகத்தை
மெருகேற்றி கொள்கிறோம்

நகம்
வெட்டி கொள்கிறோம்
நளினமாக
பேசி பழகுகிறோம்

தூசு
படாமல்  இருக்கவும்
தும்மல்
வராமல் இருக்கவும்

நம்மை நாமே
துன்புறுத்தி கொள்கிறோம்
நாளுக்கு நாள்
பன்படுத்தி கொள்கிறோம்

இறுதியில்
இரவில் கூட
ஒருவனாக  முடியாமல்
தோற்று போகிறோம்

எந்நேரமும்
முன்னேற எண்ணி
பின்னோக்கி பார்க்க
மறந்து விடுகிறோம்

எந்தவொரு
பிடிப்பும் இல்லாமால்
விழுந்து கொண்டிருக்கும்
நம் நிழலை
நிஜத்தின் மறுபக்கத்தை !

Friday, July 15, 2011

எந்தையே - 26

முகவரி தொலைந்து
நிற்கிறேன் - உன்
முக  வடிவம்
இழந்து தவிக்கிறேன்

கனவுகள்  கருக
கண்டேன் - என்
கண்களில் கண்ணீர் 
பெருக கண்டேன் 

உன்னை தின்ற
உயிர் சிதை
என்னுள் எரிகிறது
இன்னும் அணையாமல்

கருகி கரைந்த
குருதி சாம்பல்
உறுதி குலைத்து
உள்ளம் கலைக்கிறது

இருக்கிறாய் என்று
யாரும் சொல்வதில்லை
இல்லை என்பதை
இதயம் ஏற்பதில்லை

இருந்தும் இல்லாமல்
இருப்பவர்கள் கோடி
இல்லாமல் இருப்பவன்
என்றுமே நீதான்

ஐந்தில் நடப்பது
அறியாத துக்கம்
பத்தில் நடப்பது
புரியாத ஏக்கம்

இருபதில் இழப்பது
இளமையின் சோதனை
அறுபதில் இறப்பது
முதுமையின் வேதனை

சொத்துகள்  இருந்தும்
சுகம் இல்லை
சொந்தங்கள் இருந்தும்
சொர்க்கம் இல்லை

பணம் இருந்தும்
நிம்மதி இல்லை
குணம் இருந்தும் 
குதுகலம் இல்லை

மகனே  என்று
முறையிட்டு அழைக்க
தாய் மட்டும்
தனியாக இருக்கிறாள்

தந்தையே என்று
மனம்விட்டு  அழைக்க
நீவிட்டு சென்ற
நினைவுகள் மட்டும்

கனவுடன் வாழ்வதை
கண்கள் மறப்பதில்லை
நினைவுடன் நடப்பதை
நெஞ்சம் விடுவதில்லை

துணையுடன் கடப்பது
துணிச்சலான  வாழ்க்கை
துணையிழந்து தவிப்பது
இணையில்லாத துன்பம்

என்ன சொல்ல
ஆறும் காயம்
என்னை கொல்லும்
ஆறா வடு

உன்னை கண்ட
உள்ளம் எண்ணும்
கண்கள் மூடி
கனவில் வாழ !

Tuesday, July 5, 2011

எந்தையே - 25

உன்னால் 
உடைந்து போன 
என் தாய் 

உன்னையே 
உயிர் காத்த 
என் அன்னை 

ஒதுங்கி நிற்கிறாள்
தன்
உறுதி குலைந்து 

ஒடுங்கி விட்டாள் 
தன் 
உள்ளம் நொந்து 

உன்னை மட்டுமே 
நம்பி வந்தவள் 
சின்ன வயதில் 
தகப்பனை இழந்தவள் 

என்னென்ன துன்பங்கள் 
அனுபவித்தாள் 
என்பதை அறிந்தவன் 
எனக்கும் மேலாக 

அவள் வளையல்கள் 
உடைக்கப்பட்டன 
அவள் குங்குமம் 
அழிக்கப்பட்டது 

அவள் தாலி 
அறுக்கப்பட்டது 
நூல் சேலை 
கொடுக்கப்பட்டது
 
எந்த உலகம்
உன்னை 
ஒழித்து விட்டதோ 
அந்த உலகம் 
அன்னையை 
ஒதுக்கி விட்டது   

எந்த இலட்சியம் 
உங்களின்  
உயிர் மூச்சானதோ 
அந்த இலட்சியம் 
உயிர் 
மூச்சை விட்டது 
 
வெறும்
துரும்பாகி விட்டாள் 
இரும்பு 
மனதை இழந்து 

பெரும்
துயரம் அடைகிறாள்
ஓரம்
ஒதுங்கி சென்று

எந்த
நல்ல காரியமும் 
நடக்காதம்
அவள் தொடங்க

எந்த 
நல்ல நேரமும்
நெருங்காதம்
அவள் நடக்க  

வேறு
ஒரு நாதியும்
இல்லை
உங்களை தவிர

எங்களை வளர்க்க
இன்றும்
வேலை பார்க்க
செல்பவள் அவள்

உன்னை
இல்லாமல் செய்து
என்னை
ஏமாற்றிய உலகம்

அன்னையை
இருக்கச் செய்தும்
என்னை
ஏமாற்றப் பார்க்கிறது

என்
இன்பங்களை பகிர
அன்னைக்கும் தந்தைக்கும்
அறுகதை 
இல்லை என்று !

எந்தையே - 24

இருபத்தி எட்டு 
ஆண்டுகள் 
என்னையும் காத்து 
உன்னையும் காத்தாய்   

இப்போது 
ஏன் மறந்தாய் 
அப்போது போல் 
இருந்திட எண்ணாமல் 

இரண்டு ஐந்து
நாட்கள் 
என்னை இழந்து 
உன்னை காக்கவில்லை   

இப்படி 
ஒரு சோதனை 
எப்படி 
தரலாம் எனக்கு 

கல்லூரி 
முடித்தது முதல் 
காலச் சக்கரம் 
பின்னோக்கி நகர 

ஏங்கி
தவித்த நாட்கள் 
எவையும் 
எனக்காக அல்ல 

உன்  
தலை முடி 
நரை கண்ட 
என்மன தவிப்பது 

தமக்கையின் 
திருமணத்தில்
தடித்த 
கால் கண்டேன் 

முடியாமல் 
உன்னை 
நான் கண்ட 
முதல் முறையது

மனம் வருந்துவேன்
என்று  
மறைக்கப்பட்ட
பேருந்து விபத்துகள்

மறுமுறை நடக்காமல் 
இருக்க 
மன்றாட வைத்தது 
உன்னையும் தெய்வத்தையும்  

உதவிக்கு 
உறவுகள் இன்றி 
உபத்திரவத்திற்கு 
உற்றவர்கள் சேர
 
அருகில் இல்லாத 
இந்த மகன் 
ஆண்டவனைத் தான் 
நம்பி வணங்கினான்

வருத்தங்கள் 
குறையவில்லை  
உனக்கு வயோதிகம் 
வந்த பின்னும் 

பொறுப்புகள் 
வரவில்லை 
எனக்கு வாலிபம் 
பிறந்த பின்னும்            

சிறு வயதில்
நீரில் விழுந்து
ஒருமுறை
தேர்வு வைத்தேன்

பெரும் துன்பத்தில்
ஊரார்
தினம் தினம்
தேர்வு வைத்தனர்

வெற்றி பெற்றவன்
நீ
பெற்ற மக்களின்
உயிரை
பேணிக்  காப்பதில்

ஒரே முறை
தேர்வு வைத்தாய்
உடல் சோர்ந்து
உள்ளம் சோர்ந்து
     
மறந்து போனேன்
உனக்கு
ஊக்கம் தரும்
மருந்து கொடுக்க

இழந்து நிற்கிறேன்
இன்று
எந்தை இல்லாத
அநாதை என்று !

Friday, July 1, 2011

எந்தையே - 23

அமைதியான இரவில் 
ஆழ்ந்த உறக்கத்தில்  
நான் 
உன்னோடு இருப்பதாக 
ஒரு கனவு 

ஓய்வெடுக்கும் உடலில்
உறக்கமில்லா மனதில்
நீ
என்னோடு இருப்பதாக
ஒரு நினைவு  

நடந்து முடிந்த
நடக்க மறந்த 
இரண்டும் இணைந்த 
மாறுப்பட்ட நிகழ்வுகள் 

உடல் இல்லாத 
நீயும் 
உடல் உறங்கிய 
நானும் 

உருவம் பெற்று 
உலவுகிறோம் 
உறவுகள் கண்டு
குலாவுகிறோம்

அன்பு பாசம்
சண்டை சச்சரவு
அனைத்தும் நடக்கிறது
அன்றாட வாழ்க்கையாக

சிறு மூளை
பதிகிறது
புது நிகழ்வாக
அடி மனம்
சொல்கிறது
இதயம் தொட்டதாய்

உறக்கம்
கலைந்த பின்னும்
மறக்க
முடியாத கனவுகள்

உடல்
இல்லாமல் கூட
உயிர்
வாழும் நினைவுகள்

உடன் இருந்தவர்கள்
உண்மை என்று
உணர முடியாத
ஒரு கற்பனை

உலகில் இருப்பவர்கள்
உலகில் இல்லாதவர்கள் 
ஒருவரும்
பொறுப்பேற்காத சொப்பனம்  

ஒரு சில
மணித்துளிகளில்
கரைந்து போன 
ஒரு நாள்
இரண்டு நாள்    
காட்சிகள்

ஒரு
தூசு இல்லை
அலைந்த பின்னும்
ஒரு
தும்மல் இல்லை
நனைந்த பின்னும்

ஒரு
காயம் இல்லை
விழுந்த பின்னும்
ஒரு
கண்ணீர் இல்லை
எழுந்த பின்னும்  

நேற்று முடிந்த
இன்று தொடங்கிய
நாளை நடக்கவிருக்கும்
நினைவுகளுடன்

கலந்து போக
நினைக்கும்
கனவின் போராட்டம்
கனவாக போகிறது  

நீ மட்டும்
நிழலல்ல என்று
சொல்ல
நெஞ்சம் துடிக்கிறது !


Tuesday, June 28, 2011

எந்தையே - 22

விலை உயர்ந்த 
காலணியை
விட்டு பிரிந்த 
வெயில் காலம்

பொட்டல் வெளியில்
நடந்து சென்றால்
பொடி சுடாமலிருக்க
அன்னை கொடுத்தாள்

தந்தையின் காலனி
எந்த சேதமும்
இல்லாமல்
எடுத்துவா என்று 

கற்களை கடந்தேன் 
முற்களில் நடந்தேன்
உச்சி வெயிலும்
ஒன்றும் செய்யவில்லை 

உழைத்து உழைத்து
ஓடாகி
உறுதி குலைந்த
இறுதி காலத்திலும்

உன்னை போல்
என்னை காத்திட
நினைக்கும்
உன்னுடைய செருப்பு

அனுமதி இன்றி
பண்டம் மாற்றினாய்
என்
அறுந்த காலனியை

சிறந்ததொரு
புது காலனியை
தேர்வு செய்து
தந்து விட்டு

ஒரு முறைக்கு
இரு முறை
ஒட்டு போட்டு
அணிந்து கொண்டாய்

ஒவ்வொரு முறை
காலணி மாற்றம் 
நிகழ்ந்த பொழுதும்  
உள்ளம் நெகிழ்ந்தேன்
  
என்னை
செருப்புக்காக அல்ல
உன்
சிறப்புக்காக பெற்றதால்

என்
வருமானத்திற்கு பின்
உன்
அடி வருடினேன்

உன்னால்
புனர் வாழ்வு
பெற்ற
அறுந்த செருப்புகளால்

இடம் கொடுத்து
உடன்
வைத்து கொண்ட
ஒருவன்

தந்தை அன்பில்
வந்து பார்த்த
உன்னை
தரம் தாழ்த்தி  

புத்தி கெட்டு
உளறியதில்
புண் பட்டு 
பிரிந்து சென்றாய்

அடிக்கடி வந்து
உன்
அடி வருடும்
அனுமதி தராததால்

என்
அறுந்து போன
செருப்புகள்
சோர்ந்து கிடந்தன   

விரக்தி நாட்கள்
வழங்கிய
விலை குறைந்த 
செருப்பு


இறுதி நாட்களில்
உன்னை
ஏந்தி செல்லும்
பெருமை பெற்றது  

ஆறு மணிநேர
இடைவெளி
அரை மணிநேர
நடைபயணம்

உன் செருப்பை
நான் அணியும்
சிறப்பை 
பெற்று தந்தது

இராமனின் காலணி
பரதனின்
தலையை அலங்கரித்தது
புராணம்

தந்தையின் காலணி
மகனின்
காலை அலங்கரிப்பது
கிரீடம் !

Sunday, June 19, 2011

எந்தையே - 21

உன்
மனைவியின் தயவில்
மனைக்கு
மனு போட்டு

உருகி உருகி
உள்ளே நுழைந்த
ஊர்
நீர்த்தேக்க தொட்டி

உன்னை
வெளியேற்றி விட்டு
இன்னும்
இருக்கிறது ஒட்டகமாக  

கருவறை மறக்காத
கத்துக் குட்டி
முதல்
கல்லறை அழைக்கும்
கிழக் கட்டைகள்
வரை

காண்போரிடம் எல்லாம்
நீ
தவறிழைத்தாய் என்று
சொல்ல

காது பட
நண்பன் கேட்டான்
என்ன
தவறு என்று

உன் 
இறப்பிற்கு பின்னும் 
இன்னும் 
இறுமாப்பாய் நிற்கும்

நீர்த்தேக்க தொட்டி 
தான் 
சொல்ல வேண்டும் 
என்ன குறை 
உன்னிடம் கண்டதென்று
 
அண்ணன் 
அறியாத சிறுவனாக 
இருந்த பொழுது 
ஊர் தண்ணியில் 
நஞ்சு ஊற்றியதாய்
பொய் உரைத்தனர் 

ஊர் கண் 
பார்த்திருக்கும் 
அதை 
அவன் கண் 
பழுதடைந்தது 
யார் வதை 

நியாயம் கேட்டு 
நீதி மன்றம் 
படி ஏறினாய் 
அநியாயமாய் 
உன்னை 
மிரட்டிப் பார்த்தனர்
 
என் ஆசை 
மிதி வண்டியை 
நான் காண 
பறித்துச் சென்றனர் 

ஊருக்கு நீருற்றிய 
பாவம் தீர்க்க 
வழக்கறிங்கருக்கு
பால் ஊற்றினாய் 

ஒரு ஊருக்காக 
ஒரு குடும்பம் 
பலியிடப் பட்டது 
நீதி தேவதைக்கு 

மனமுடைந்து 
மனைவியோடும் 
மக்களோடும் 
அன்றே 
மாண்டு போக
தோன்றிய துணிவை

அன்னை
ஆறுதல் சொல்லி
தேற்ற பணிந்ததால் 
உன்னை மட்டும்
இழந்தோம் இன்று  

தமக்கை சொன்னாள்
தண்ணீர் தொட்டி
அருகில்
உனக்கொரு சமாதி
அமைத்திருக்கலாம்
என்று

நான் நினைக்கிறேன்
நீர்த்தேக்க தொட்டி
பார்க்க
உனக்கொரு கோவில்
கட்ட வேண்டும்
என்று ! 

Saturday, June 18, 2011

எந்தையே - 20

எங்கோ 
ஆந்தை அலறுகிறது 
கூட்டான் கூவுகிறது   

இது 
ஆவி நடமாடும் 
நேரம் என்கிறார்கள் 

அவர்களிடம் 
கேட்க தோணுகிறது
என் தந்தையை 
பார்க்க முடியுமா 
என்று      

அன்று 
என் தந்தை 
உள்ளே போ
என்றார்

இன்று
நான் 
வெளியே சென்று
பார்க்கிறேன்

இருட்டில்
அவர்
எங்கு இருக்கிறார்
என்று 

அவர்
சொல்லி தந்த
ஆவி பாடம்
அவராலேயே
உடைக்கப்பட்டு விட்டது   

கருமையான
இருள்
வெறுமையான
வானம்

வெள்ளை ஆடையுடன் 
மேகம்
கொலுசு சத்தமிடும்
வண்டுகள்

காற்றில் ஆடும்
மரங்கள்
கதவை தட்டும்
காற்று

குறி சொல்லும்
கோடாங்கியின்
நடு நீசி
நடமாட்டம்

எல்லாம் இருக்கிறது
உலகில்
இல்லாதவர்கள்
வருவதற்கான அறிகுறிகள்

கைபேசியில்
குரல் கேட்டே
குறை அறியும்
என் தந்தை

கண்ணீர் விட்டு
அழுதும் 
ஆறுதல் சொல்ல
வரவில்லையே    

இருக்கும் போது
இறந்ததாக காட்டிய
கனவு
இறந்தப் பின்
இருப்பதாக காட்டுகிறது     

இருப்பவர்கள்
இரைப்பை பசிக்காக
கூறும்
பொருளற்ற பொய்கள்

இறந்து போன
என் தந்தையை
ஒரு முறை
காண உதவாதா !

எந்தையே - 19

மவுனமாக நிற்கின்றன  
உன் 
மனையின் 
மரம் மட்டைகள் 

மரமாக இருக்கின்றன 
உன் 
சொத்தின் 
நிலம் நீட்சிகள் 
 
நூறு முறை 
போரடியிருப்பாய் 
இவைகளை 
காப்பாற்றி பாதுகாக்க 

ஆயிரக் கணக்கில் 
அள்ளி 
இறைத்திருப்பாய் 
அவைகளை 
பிரியாமல் இருக்க 

கல்லு போன்று 
இருக்கின்றன 
இந்த 
காணி நிலங்கள் 

கண்டும் காணமல் 
சிரிக்கின்றன 
அந்த 
வானம் பார்த்து 

என் 
உழவின் கரங்கள் 
ஒட்டவில்லை 
இந்த மண்ணோடு 

உன் 
நெற்றி வியர்வை
நிலத்தில்
தெரிகிறது இரத்தமாக

என் 
பிறந்த உடலை 
தாங்கி
பெருமைப்பட்ட வீடு 

உன் 
இறந்த உடலை 
ஏந்தி
இரங்கல்பட்டு விட்டது   

இடிந்து போனது 
தென்னை மரம் 
மட்டும் தான் 
உன் 
இறப்பிற்கு முன்னே 
விழுந்த இடியில்  

இன்னும் 
தேக்கு நிற்கிறது 
தீர்க்கமாக 
தோப்பு இருக்கிறது 
துறவியாக 

கிணறு கூட
தண்ணீரில் தான்
மிதக்கிறது
கண்ணீர் இன்றி

உன்னை
அசைத்து பார்த்த
இந்த
அசையா சொத்துக்கள்

இன்று
அமைதியாக இருக்கின்றன
உன்
இறப்பை அறிந்தும்

வேலியோர
வேப்பமரம்

சலசலத்தபடி
நிற்கிறது
உன்
சாவின் செய்தியுடன் !

Thursday, June 16, 2011

எந்தையே - 18

நீ 
வாழ்க்கையில் 
வெற்றி 
பெற்றவன் தான் 

நான் 
வாழ்க்கையை 
வென்று 
கொண்டிருப்பதால் 

உன் 
விடா முயற்சியின் 
வெற்றியை 
நான் உணருகிறேன் 

என் 
விழித்திரையின் 
ஈரங்கள் 
உனை நினைவுட்டுவதால் 

நீ 
அனுபவிக்க தவறிய 
இன்பங்கள் - இன்று 
அணிவகுத்து நிற்கின்றன 

நான் 
எண்ணி எண்ணி 
பார்த்துவிட்டு - ஏக்கப் 
பெருமுச்சு  விடுகிறேன்

ஒருவேளை 
உணவில் 
ஒரு உருண்டை 
உனக்கு 
கணிக்கையாகிறது

சிறிது நேரத்தில் 
சத்தமின்றி 
சில எலிகள் 
அதை 
உண்டுவிடுகிறது    

உனக்கு 
படைத்துவிட்டு
காக்கைக்கு 
அன்னமிடுகின்றனர் 

கணக்காக 
வைக்கப்பட்ட 
கைப்பிடி சாதத்தை 
கூட்டத்துடன்  கொரிக்கிறது

மனது
ஆறவில்லை என்றால்
ஒரு
மனிதனுக்கு
விருந்து வைக்கிறார்கள்

பசியாற
உண்டு விட்டு
பதிலுக்கு
நன்றி சொல்லி
பிரிந்து செல்கிறான்  

என்னால் 
உணர முடிகிறது 
நீ 
இறந்து போனதை 

உன்னால்
உண்ண முடியாது
இந்த
அன்ன தானங்களை

நீ
எனக்கு தந்தை
நான்
உனக்கு மகன்

என்னை
நீ அறிவாய்
உன்னை
நான் அறிவேன்

சடங்குகள்
நடத்தும்
சம்பரதாய
பாடங்கள் இவை

கடமைகள்
ஆற்றும்
குழந்தைகள்
செய்யும் இதை

என்
கடவுளே நீ
தினம்
கண்ணில் தான்

உனை
நினைத்து நினைத்து
உருகுவதே
உள்ள களிப்பு

உன்
கனவை நினைவாய்
மாற்றுவதே
எண்ண துணிவு !

Thursday, June 9, 2011

துளிகள் - பிச்சைக்காரன்

உபயோகித்து
ஒதுக்கி தள்ளப்பட்ட
உபயோகமின்றி
உதறி எறியப்பட்ட
உயிருள்ள
மனித குப்பை !

------------- X ------------------------

கண்கள் பார்க்கின்றன
காதுகள் கேட்கின்றன
கைகள் அசைகின்றன
கால்கள் நடக்கின்றன
 
வாய் புலம்புகிறது  
வயிறு பசிக்கிறது    
என்பதால்
எந்திரமாக கூட
விலை போகவில்லை !

------------- X ------------------------

அருகில் வந்து
சிறுநீர் கழிக்க 
கூட
முகம் சுளிக்கிறது

செல்வந்தன் வீட்டு
செல்ல நாயாக 
மாறிட
வரம் வேண்டும் !

------------- X ------------------------ 

புத்தாடை
எடுக்க வேண்டும்
புதிதாக
எறியப்படுகிறது
கந்தல் துணிகள் !

------------- X ------------------------ 

வாடிக்கையாளர்
வழக்கமான நேரத்தில்
உழியர்கள்
நாழிகை கடந்து  

ஒரு வாய்
தேனீர் வேண்டும்
தெரு குப்பைகளில்
எறியப்படுவதில்லை !

------------- X ------------------------

சுத்தப்படுத்தி
கொண்டு
சுமை தூக்குபவர்கள்
கோடி பேர்

சுத்தமின்றி
அழுக்கு
சுமை தாங்கும்
ஒருவன் நான் !

------------- X ------------------------

என்னை
நான்
கவனிப்பது இல்லை
என்
பசியை
கவனிக்காமல்
இருக்க முடிவதில்லை !

------------- X ------------------------

தினமும்
தெருக்களில்
இறப்புக்களின் ஊர்வலம்
இறந்தவர்களில்
ஒருவரது பெயராவது
எனக்கு
மாற்றப்பட்டிருக்கலாம்
அடுத்தவேளை சோற்றுக்கு !

 ------------- X ------------------------ 

மாடுகளை 
கூட 
வேலைக்கு பழக்கும் 
மனிதர்கள் 

மனிதன் 
என்னை மட்டும் 
மறந்து விட்டது 
தலைவிதி !


Tuesday, June 7, 2011

எந்தையே - 17

நீ
இறந்த பின்பு
உணர்ந்து பார்க்கிறேன்  

இருப்பவர்களுக்காக
மட்டுமல்ல
இறப்பவர்களுக்காகவும்
வாழ்பவர்கள்
இருப்பதை

இறந்தும்
வாழ்வதென்றால்
இன்னதென்று
அறிந்து கொண்டேன்

கனவுகளும்
கட்டளையிடும்
நினைவுகளும்
உத்தரவிடும்

வீட்டின்
உத்தரத்தில்
பல்லியின் சத்தம்
உற்று நோக்கப்படும்

வீட்டு
கூரையில்
காக்கையின் கரைதல்
காரணம் ஆக்கப்படும்  

உன் 
பாதம் பட்டு 
உடைந்து போன 
சருகின் சத்தம் 
உரத்து கேட்கும் 

நீ 
பாதி தொட்டு 
விட்டு போன 
வேலையின் மீதி 
வெறித்துப் பார்க்கும் 

கண் கூசும்  
ஒளியில் 
கண் தெரியா 
இருட்டில் 

உருவமில்லா 
காற்றில் 
ஒருவருமில்லா
அறையில் 

ஒரு முறை 
ஊடுருவி 
பார்க்கும் 
என் விழிகள் 

ஒவ்வொரு முறையும் 
ஏமாற்றமடைந்து 
ஓரத்தில் கசியும் 
ஒருதுளி கண்ணீர் 

எங்கோ 
நீ 
இருக்கிறாய் 
என்ற 
நம்பிக்கை 

இங்கே 
நீ 
இருப்பாய் 
என்ற 
நப்பாசை 

என் 
நாட்களை 
கடத்துகிறது 
என் 
வாரங்களை 
கடத்துகிறது 

என் 
வருடங்களை 
கடத்துகிறது 
என் 
வாழ்க்கையை 
கடத்துகிறது 

வாழ்பவர்களால் 
வாடவிடப்படும் 
என் மனம் 
வீழ்ந்துவிட்டாலும்
துளிர்வூட்டப்படும்
உன்னால் 
 
உண்மை 
இதுவென்றால் 
நான் 
இறந்தவர்களுக்காக 
வாழும் வர்க்கம் !

எந்தையே - 16

செல்வத்தில்
பிறந்தவன்
நீ

செல்லமாய்
வளர்ந்தவன்
நீ

ஊரார் சொல்ல
கேட்டவன்
நான் !

துன்பத்தில்
வாழ்ந்தவன்
நீ

துயரத்தில்
வீழ்ந்தவன்
நீ

என் கண்ணார
கண்டவன்
நான் !

அகட விகடம்
அறியாதவன்
நீ

பகடைக் காயாய்
ஆக்கப்பட்டவன்
நீ

இன்றும் அனுபவித்து
அறிகிறேன்
நான் !

முன்னேற
துடித்தவன்
நீ

முட்டுகட்டைகளால்
நொடிந்தவன்
நீ

உன் முயற்சியின்
முதல்படி
நான்  !

தந்தை
என்பவன்
நீ

தாயும்
ஆனவன்
நீ          

உன் அன்பில்
நனைந்தவன்
நான் !

இன்பங்களை
எதிர்பார்த்தவன் 
நீ

இன்னல்களை
எதிர்நோக்கியவன்
நீ  

இன்றும் உணர்கிறேன்
ஏமாற்றங்களை
நான் !

சாமானிய
மனிதன்
நீ

சராசரியாய்
வாழ்ந்தவன்
நீ

உன் சோதனைகளை
சுமக்கிறேன்
நான் !

செதுக்காத
சிற்பம்
நீ

செல்லிலும் உளி
தாங்கியவன்
நீ

உன் சாவில்
உடைந்த
இதயத்தில் உணர்ந்தேன்
நான் !          

Sunday, June 5, 2011

துளிகள் - முதிர்கன்னி

நான் 
வயதுக்கு 
வந்துவிட்டேன் 
உந்தன்
கண்
பார்த்த போதே 

என் 
வயது 
கடந்து விட்டது 
என்னை 
பெண் 
பார்த்த போது !
 
கண்கள் 
பட்டு பட்டு 
கனிந்த பிறகும் 
உன் 
கரங்கள் பட்டு 
நாணம் வருவது 
பெண்மையின் அதிசயம் !
 
கல்லூரி முடிந்ததும் 
கிடைத்தது 
கைப்பை மட்டுமே 
அதில் 
உனக்காக சேர்த்தது
எனக்கான 
அழகு சாதனங்கள் !

சம உரிமை
பெற்று விட்டேன்
உனக்கு
அதிகாரியாய் அமர

சமைந்த பின்னும்  
மறந்து விட்டாய்
என்னை
அருகில் அமர்த்த !

அருகருகே நிற்கிறோம்
அறியாமல்
உரசிக் கொள்கிறோம்
அவரவர்
அலுவல்களில் பிரிகிறோம்  

இருவருக்கும் இடையில்
யார் போட்டது
இந்த
இலட்சுமணக் கோடு  !

கொலை
செய்வது பாவம்
தற்கொலை
செய்வதும் பாவம்

பெண்ணை
சிறை எடுக்கும்
பழக்கத்தை
ஒழித்த சமுதாயம்

என்னை நானே
சிறை படுத்தி
கொள்வதை
ஏளனமாய் ரசிக்கிறது !

என்னை
வழி மறித்து
காதலிக்க
மனு போட்ட
நூறு பேரில்

என்
தந்தையை
இடை மறித்து
பெண் கேட்க
துணிவில்லாதோர்
நூறு பேர் !
 

Saturday, June 4, 2011

சிந்திப்பதை நிறுத்தி விடு

மனதின் வேகம் 
மிகவும் அதிகம் 
மவுனத்தின் சத்தம் 
மின்னலின் அம்சம் 

என்
பயண தளத்தில்
பாதச்சுவடுகள்
பதியும் முன்னே

மனம்
பயணக் களைப்பில்
பாதி உறக்கத்தில்
புலம்பி தள்ளுகிறது

இன்பம்
என்றால்
ஆகாயத்திற்கு மேலே
பறக்கிறது

துன்பம்
என்றால்
அதல பாதாளத்தில்
விழுகிறது

கற்பனை கோடுகளின்
காட்சிகள்
கண்களை மறைக்கும்
உச்சம்

பார்வை நரம்புகள்
அறுந்தாலும்
பார்ப்பதை நிறுத்தாத
கனவுகள்

மிருகங்களோடு
இருந்து கொண்டு
மிருகமாக
இருண்டு கொண்டு

இருந்த
என் காலங்கள்
இறந்த
என் காலங்கள்

சிந்தனையின்
தீர்க்க தரிசனம்
செயலாக்கத்தின்
தேர்ந்த வெற்றி

ஒட்டு மொத்த
இயற்கைக்கும்
ஒரே குடிமகன்
நான் 

இயற்கை தேர்வில்
என்றும்
எனக்கு முதலிடம்
தான்

இன்றும்
ஏழைச் சிந்தனை
இயற்கையை
ஆண்டு விடும்

என்றும்
மனிதனின் அறிவு
மண்ணின்
உயர்ந்த அளவு  

எந்த நியதியும்
ஏற்பதில்லை
மனிதனுக்கு மனிதன்
உயர்ந்தவன் என்று

இயற்கை நீதியில்
இருப்பதில்லை
இவனுக்கு இவன்
சிறந்தவன் என்று

ஒரு மனிதன்
போதும்
உலகின் வளங்களை
ஆள

ஒவ்வொரு மனிதனும்
தோன்றியது
உடல் புணர்ச்சின்
வேலை     

இன்று
ஒருவரை ஒருவர்
வெல்ல நினைப்பது
கொல்ல துணிவது

உள்ள கிளர்ச்சியின்
ஒவ்வாமை
உண்மை புரட்சியின்
அறியாமை 

கடிவாளம்
இருந்தால் போதும்
மனதை
கட்டி விடுவேன்

இயற்கையை
எட்டிப் பார்க்க
கூட
இயலாத எனக்கு

சிந்தனை எதற்கு
எந்த நேரமும்
சிந்திப்பது
யாரை வெல்வதற்கு

நான்
மனிதனாக பிறந்தது
மண்ணை ஆளத்தான்
எந்த
மனிதனையும் அல்ல !

நோய்

தன்னை 
நினைவுபடுத்தும் 
என் உடலின் 
மனப் போராட்டம் 

என்னை 
செயலிழக்கச் செய்யும் 
என் மனதின் 
உடல் போராட்டம் 
 
நான் 
பிரித்துப் பார்க்க 
முடியாத எந்திரம் 
என் உருவம் 

நாள் 
தவறி விட 
கூடாத உழைப்பு 
என் உயிர் 
 
உண்ண உண்ண
பெருகும் வயிறு 
உண்ணாவிட்டால் 
கருகும் அதிசயம் 

குடிக்க குடிக்க 
கொள்ளும் நீர் 
குடிக்காவிட்டால் 
கொல்லும் அதிர்ச்சி 

உடல் சூடும்
ஒரு கேடு 
உடலில் தங்கும்
அதீத நீரும் 
ஒரு சாக்காடு 

சர்க்கரை 
ஒரு வியாதி 
தேக்கரண்டி தாண்டும்
காரம் 
மற்றுமொரு வியாதி       

வயிறு 
பசிக்கிறது 
வாய் 
புசிக்கிறது 

உணவு 
செரிக்கிறது 
உறக்கும்
பிறக்கிறது     

மீண்டும்
பசிக்கிறது 
மீண்டிட
புசிக்கிறது    

எந்திர மனிதனுக்கு 
கூட
இந்த செலவு 
ஆகாது 

மனித எந்திரத்திற்கு 
மட்டுமே 
மாத செலவு 
அதிகம் 

நல்ல இடம் 
வேண்டும் 
நல்ல காலம் 
வேண்டும் 

இருந்தும் 
நல்ல நேரம் 
வேண்டும் 
நல்ல பாம்பு 
கொத்தாதிருக்க 

புல்லிலும் 
போகும் உயிர் 
கல்லிலும் 
கிடைக்கும் மரணம் 

பேருந்தை 
இரும்பில் செய்துவிட்டு 
வேகத்தை 
விதியிடம் விட்டுவிட்டு 
 
பெயருக்கு 
ஒரு அறிவிப்பு 
படியில் பயணம் 
நொடியில் மரணம் 
 
வேறென்ன 
செய்ய முடியும் 
இந்த 
வெட்கம் கெட்ட
உயிரை காக்க 
 
எந்த 
ஆரம்பம் 
எந்த 
முடிவு 

என்னை 
காக்கும் 
எல்லை என்று
தெரியாத வரை !
                 

Sunday, May 22, 2011

எந்தையே - 15

நான் 
கடவுளின் பிள்ளை 
என்று 
நம்பி இருந்தேன் 

யார் அந்த 
கடவுள் 
என்று தெரியாமல் 
குழம்பி நின்றேன் 

சிவனைப் பிடிக்கும் 
எனக்குள் 
கமலக் கண்ணனும் 
இருந்தான்

முருகன் துணை 
என்றேன் 
விநாயகனை வலம்
வந்தேன்  

இயேசுவின் கிருபை 
கிட்டியதுண்டு 
மாதாவின் மணியோசை 
கேட்டதுண்டு 

அல்லாவை கூட
தொழுதிட 
ஆசைப்பட்டேன் 

எல்லோரையும் 
ஒன்றாக்கி 
ஓம் 
சக்தி மந்திரத்தை 
உருவாக்கினேன்
 
தாய் தான் 
உலகம் என்று 
உடன் அழைத்து 
உருகி நின்றேன்
 
என் 
நன்மை தீமை 
இரண்டையும் 
உரிமையுடன் 
ஒப்புவித்தேன் 

நான்
தவறு செய்தால் 
தரும் 
தண்டனையை 
தாங்கிக் கொண்டேன்     

கோயில் 
பெரிதென்று 
எண்ணவில்லை 
என் 
மனதில் குடியிருத்தி
மனம் மகிழ்ந்தேன்  
 
நினைத்தாலும் 
நினைக்காவிட்டாலும் 
வணங்கினாலும் 
வணங்கவிட்டாலும்
 
என்னை 
மறந்திட மாட்டாய் 
என
மனதார நம்பினேன் 

அடிகள் 
விழுந்த போதும் 
அவை 
தடுக்கப்பட்ட போதும் 

நான் 
உன் மகன் 
என்னை 
அடிப்பவனும் நீயே 
அணைப்பவனும் நீயே
 
என்று 
இருமாத்து நின்றேன்
உன்னை
மனமுவந்து தொழுதேன்
 
இருந்தும் 
அவ்வ போது
நெருடியது 
யார் அந்த 
சக்தி என்று 

சிவனா
கண்ணனா 
முருகனா 
விநாயகனா 
இயேசுவா 
அல்லாவா 

நான் 
மகனென்று நம்பும் 
என்
இறைவன் யார் 

எந்தையே 
உன் 
இறப்பிற்கு 
பின் தான் 
உணர்ந்தேன் 

நீ தான் 
என் கடவுள் 
என்று 

நான் என்றும்
உன் மகன் 
என்று 

அன்றும் 
இன்றும் 
என்றும் 

என்னை 
பின் தொடர்வது  
உன் 
ஆன்ம சக்தியே !
       
  

   
        

எந்தையே -14

இலக்கு இல்லாமல் 
தவிக்கிறது 
இந்த ஏவுகணை 

இதை 
எய்திட வேண்டியவன் 
இறந்து போனதால் 

தானியங்கி தான் 
என்றாலும் 
தான் இயங்கும் 
காலம் எது 

நானியங்கி தான் 
என்றாலும் 
நான் இயங்கும் 
களம் எது 

உன் போராட்ட 
வாழ்வில் 
புண்பட்டு விழுந்தாய்  
ஊரார் 
கண்பட்டு வீழ்ந்தாய்
 
உன் போர்களத்தில் 
தீட்டப்பட்ட 
கூர்வாள் நான் 

நன் மதிப்பில் 
நவீனப் 
படுத்தப்பட்ட  
வன்கணை நான் 

இதன் 
செயல் வடிவங்களின் 
சிற்பி நீ
 
என் 
செயலிகளின் 
சிற்பம் நீ 

உன் 
சொற்ப பொருட்களில் 
உருவாக்கப்பட்ட 
அற்பன் நான் 

என் 
அற்ப குறிகளில் 
அகப்பட்ட 
சொற்ப உலகமிது 

அழுகை 
அடங்கிக் கொண்டு 
வருகிறது 

ஆத்திரம் 
தொடங்கிக் கொண்டு 
வருகிறது 

எதிரிகள் 
என்னை சுற்றி 
வருகிறார்கள் 

எதிர்ப்புகள் 
என்னை பற்ற 
வருகிறது 

சரியான உதவும் 
கருவிகள் 
பொருத்தப் படாததால்

விரைவாக 
நிறைவேற்ற முடியாமல் 
உன் கட்டளைகள் 

நல்லவர்கள் 
கெட்டவர்கள்
நண்பர்கள் 
எதிரிகள் 

எல்லோரின் 
எதிர்பார்ப்பும் 
இது தான் 

இந்த 
ஏவுகணை 
என்ன செய்யும் 

இந்த நேரத்தில் 
என் 
உறுதிமொழி 
ஒன்று தான் 

இது ஒரு 
தானியங்கி எந்திரமாக 
உருவாக்கப் பட்டுள்ளது 

எய்தவனின் 
இறக்கும் கால 
இயற்கையையும் 
கருத்தில் கொண்டு ! 
      

Monday, May 9, 2011

கா.தலைவி - 6


இதயம்
இடி இடிக்கிறது
இமைகள்
துடி துடிக்கிறது

இன்று
அவனை மீண்டும்
காணப் போகிறேன்    
என்று
எண்ணும் பொழுது

என்னை அறியாமல்
என்
நிலை மறக்கிறேன்

எனக்கே தெரியாமல்
நான்
எனை மறக்கிறேன்

ஊர் சென்று
திரும்பும் வரை
என்ன செய்திருப்பான்
என்
பெயர் கூட 
தெரியாமல்

மறந்திருப்பானோ
வேறு
பெண்ணை
நினைத்திருப்பானோ  

ஒரு கணம்
கண்கள்
கலங்கிவிட்டேன்

இனம் புரியா
வலியில்
அழுதுவிட்டேன்

பெண்ணாகி 
போனதால்
உன் முன்னே
சிலையாகி போகிறேன்

விருப்பு வெறுப்பு
எதுவும் சொல்லாமல்
உன்னை நெருப்பில்
நிறுத்துகிறேன்

பொங்கி வழியும்
என்
ஓர விழிப்பார்வையில்
உள்ளம்
அறிய துடிக்கிறாய்

ததும்பி வழியும்
என்
இறுக்க புன்னகையில்
உன்
எதிர்காலம் கணிக்கிறாய்

என்னப்
பெண்ணிவள் என்று
ஒருமுறை
நினைத்திருந்தால்
எந்த பெண்ணுக்கும்
காதல் கிடைத்திருக்காது

என்ன
செய்ய நான்
முகவரி தெரியா
உன் காதல்
என் முகவரி
மாற்றும் சக்தியுடையது

மவுனம் தான்
என்
மனதின் தூதுவன்
முடிந்தால்
மொழி  பெயர்ப்பு
செய்து கொள்

காத்திருப்பு தான்
என்
கன்னி ஆயுதம்

திருமணத்தில்
பறிக்கப்படும் முன்
நிருபித்து விடு
நீ எனக்கானவன்
என்று !

 

Sunday, May 8, 2011

இரவின் உறவு

நான் 
உன்னை பார்க்கையில் 
முழு நிலவாய் 
இருந்தேன் 

நீ 
என்னை பார்த்ததும் 
பிறை நிலவாய் 
தேய்கிறேன்

என் 
வானம் நீ 
உன் 
இரவில் நான்

விண்மீன் பூக்கள்
வானளாவிய
வாடா
மலர் அலங்காரம்

வீசி எறிந்த
தலையணைகள்
போல்
மேக கூட்டங்கள்   

வெளிச்சம் மிக்க
ஒரே விளக்கு
நான் மட்டுமே
உன் அறையில்

வெட்கம் மிகுந்த
ஒரே இருட்டில்
நீ மட்டும்
என் பிடியில்

என்
முகத்தின் ஓரத்தில்
உன் விரல்கள்
நாண ரேகைகளோடு

நளினமாய்
ஒரு
நடை நடந்தேன்

கிழக்கு
உச்சி முதல்
மேற்கு
பாதம் வரை      

என்
ஒளிக் கரங்களில்
ஒரு
வலை போட்டேன்

உன்னை
வாரி அணைத்து
ஆரமாய்
தழுவிக் கொண்டேன்

நம்
சதுரங்க ஆட்டத்தில்
சில
நட்சத்திரங்கள்
இடம் மாறின

பெரிய பெரிய
தடங்களைப் போல்
நாம்
எச்சிலில்
ஈரப் படுத்தினோம்    

மேகத் தலையணையில்
முகம் பதித்து
மோக விளையாட்டை
மிகைப் படுத்தினோம்

தவறிய முத்துக்கள்
தரையில் சிந்தி
காலை
பனித்துளியாய்
கண் சிமிட்டின
  
ஒவ்வொரு நாளும்
உருக்குலைந்தேன்
ஒருசில நாளில்
உனக்குள் நுழைந்தேன்

நான் என்பதை
நானாக கலைந்தேன்
நீ என்பதில்
தானாக மறைந்தேன்

அமாவாசை இரவில்
நாம்
நம் ஆக்கிரமிப்பை
இடம்
மாற்றிக் கொண்டோம்

அடுத்தடுத்த
இரு நாட்களில்
அந்தரத்தில்
விடப்பட்டது
நட்சத்திர பந்தல்

வளர்பிறையில்
எழுகின்றேன்
வாரி
சுருட்டிக்கொண்டு   

மீண்டும்
ஒரு
தேய்பிறையில்
தேய்ந்து போக !

 

Wednesday, April 27, 2011

எந்தையே - 13

ஒரு 
விடியல் 
நீ எனக்கு 

ஒரே 
விடியல் தான் 
நான் உனக்கு
 
உன்
தொலை நோக்கு 
இலட்சியப் பார்வையின்
விலைமிக்க 
கண்ணாடி நான் 

என்னை 
அடிக்கடி துடைத்து 
அழகு செய்து 
அணிந்து பார்ப்பாய்
 
ஒருமுறையாவது 
உன் 
இலக்கை 
எட்டிவிடுகிறதா என்று
 
தன்னை தானே 
சுத்தப்படுத்திக் கொண்டு 
உன் சுமையை 
குறைக்க எண்ணினேன்
 
இருந்தும் 
இளமையில் பழுப்பேறி 
இயலாமல் அழுக்கேறி 
இன்றும் 
துடைத்துக் கொண்டே 
இருக்கிறேன் 

பொறுத்து பார்த்தாய் 
புலம்பி பார்த்தாய் 
புரியாமல் 
வெறுத்துப் பார்த்தாய் 

உன் கண்ணின் 
ஒளி மங்கும் 
காலத்தில் 
ஒருநொடி யோசித்தேன் 

இந்த கண்ணாடி 
நீ 
உலகை காணவாவது
உதவுமா  என்று 

எதிர் பாராத 
நேரத்தில் 
எதையும் 
எதிர் பார்க்காமல் 

என்னை 
தனியே 
விட்டு விட்டு 
சென்றவரே 

ஒருநாள் 
உன் இலட்சிய 
இலக்கை 
நிச்சயம் எட்டும் 

இந்த 
மூக்கு கண்ணாடி 
உலகின் 
கண்களுக்கு முன்னாடி   
 
அன்று 
யாருக்கும் பொருந்தாத 
இந்த கண்ணாடி 
ஒரு 
தொலைநோக்கியாகத்  தான்   
வாழும் 

தன்
இரண்டு விலைமிக்க
கண்ணாடி கரங்களையும் 
ஒன்றாக்கி 
உன்னை வணங்கியபடியே !

Friday, April 22, 2011

எந்தையே - 12

அவ்வபோது உடைகிறேன் 
அவசரமாய் அழுகிறேன் 

எப்படி 
உன்னை இழந்தேன் 
என்று 
இன்றும் யோசிக்கிறேன் 

என்னோடு 
நீ இருக்கிறாய் 
என்று 
இன்னும் நம்புகிறேன் 

உன் முகம்
பார்க்க
எண்ணும் போதும்

உன் குரல்
கேட்க
எண்ணும் போதும்

நீ
இல்லை என்ற
உண்மை
நெஞ்சில் ஈட்டியாக
பாய்கிறது

எரியும்
உன் சிதை
இன்னும்
அணையவில்லை
என் இதயத்தில்

கருகிய
உன் உடல்
இன்றும்
கூறாகி நிற்கிறது
என் உள்ளத்தில் 

உன்னை
மறந்து போன
உலகத்தை
நினைத்து பார்க்க
பிடிக்கவில்லை

உன்னை
நினைத்து வாழும்
உள்ளத்தை
நெருங்கி நிற்க
முடியவில்லை

வெறும்
கூட்டு  கணிதமாய்
என்
வாழ் நாள்

பெரும்
பிழை பட்ட
சூத்திரமாய் 
என்
மனக் கணக்கு

மனம் விட்டு
அழுகிறேன்

என்
மனக் கவலையில்
உன்னை
மறந்து விட்டேனே
என்று 

உன்
மகனாக இருந்தும்
உன்னை
இழந்து விட்டேனே
என்று !