எந்தையே
என் சிந்தையில்
தோன்றும் பாக்கள்
பிதற்றல் அல்ல
என்றும்
என்னுடன் இருக்கும்
உனக்கு - நான்
தூவும் பூக்கள்
நண்பன் கூட
கேட்கலாம்
என்ன இலாபம்
என்று
நான் உனக்கு
மகனாய் பிறந்ததால்
தான்
அவனுக்கு நண்பனானேன்
நாளை
சுற்றம் வந்து
சொல்லலாம்
சும்மா இருவென்று
உன்னை போல்
ஒரு தந்தையாய்
இருக்க
முடியாதவர்கள்
என்னை போல்
ஒரு மகனை
ஈன்றெடுக்க
நினைக்காதவர்கள்
சுற்றும் உலகம்
சற்றும் சிந்திக்காமல்
புத்தி கெட்டவனென்று
புறம் தள்ளலாம்
சுந்தர தமிழில்
எந்தையின் சாதனைகள்
சந்தங்கள் கலந்து
சிந்தைகள் மயக்கும்
தந்தையும் மகனும்
தத்தமது
தவறுகள் திருத்தி
தியாகத்துடன் நடப்பர்
தன்னால மனிதர்கள்
தன்னிலை மறந்து
கணப் பொழுது
நினைத்து பார்ப்பார்கள்
ஒவ்வொரு
தந்தைக்கு பின்னும்
ஒரு மகன்
உருவாக காத்திருக்கிறான்
ஒவ்வொரு
மகனின் உழைப்பும்
ஒரு தந்தையின்
விருப்ப ஓய்வுக்கென்று
நேற்று
வணங்கிய கடவுள்
இன்று
வணங்காத கடவுள்
என்னை
சோதித்து பார்த்து
தினம்
வேதனை மூட்டலாம்
உன்னை
காப்பாற்றி இருந்தால்
உண்மையில்
உலகில் இருந்தால்
உணர்ந்து
கொள்ள முடியும்
என் - கவிமாலை
கடவுளுக்கே என்று !
No comments:
Post a Comment