Tuesday, June 7, 2011

எந்தையே - 17

நீ
இறந்த பின்பு
உணர்ந்து பார்க்கிறேன்  

இருப்பவர்களுக்காக
மட்டுமல்ல
இறப்பவர்களுக்காகவும்
வாழ்பவர்கள்
இருப்பதை

இறந்தும்
வாழ்வதென்றால்
இன்னதென்று
அறிந்து கொண்டேன்

கனவுகளும்
கட்டளையிடும்
நினைவுகளும்
உத்தரவிடும்

வீட்டின்
உத்தரத்தில்
பல்லியின் சத்தம்
உற்று நோக்கப்படும்

வீட்டு
கூரையில்
காக்கையின் கரைதல்
காரணம் ஆக்கப்படும்  

உன் 
பாதம் பட்டு 
உடைந்து போன 
சருகின் சத்தம் 
உரத்து கேட்கும் 

நீ 
பாதி தொட்டு 
விட்டு போன 
வேலையின் மீதி 
வெறித்துப் பார்க்கும் 

கண் கூசும்  
ஒளியில் 
கண் தெரியா 
இருட்டில் 

உருவமில்லா 
காற்றில் 
ஒருவருமில்லா
அறையில் 

ஒரு முறை 
ஊடுருவி 
பார்க்கும் 
என் விழிகள் 

ஒவ்வொரு முறையும் 
ஏமாற்றமடைந்து 
ஓரத்தில் கசியும் 
ஒருதுளி கண்ணீர் 

எங்கோ 
நீ 
இருக்கிறாய் 
என்ற 
நம்பிக்கை 

இங்கே 
நீ 
இருப்பாய் 
என்ற 
நப்பாசை 

என் 
நாட்களை 
கடத்துகிறது 
என் 
வாரங்களை 
கடத்துகிறது 

என் 
வருடங்களை 
கடத்துகிறது 
என் 
வாழ்க்கையை 
கடத்துகிறது 

வாழ்பவர்களால் 
வாடவிடப்படும் 
என் மனம் 
வீழ்ந்துவிட்டாலும்
துளிர்வூட்டப்படும்
உன்னால் 
 
உண்மை 
இதுவென்றால் 
நான் 
இறந்தவர்களுக்காக 
வாழும் வர்க்கம் !

No comments:

Post a Comment