நான்
உன்னை பார்க்கையில்
முழு நிலவாய்
இருந்தேன்
நீ
என்னை பார்த்ததும்
பிறை நிலவாய்
தேய்கிறேன்
என்
வானம் நீ
உன்
இரவில் நான்
வானளாவிய
வாடா
மலர் அலங்காரம்
வீசி எறிந்த
தலையணைகள்
போல்
மேக கூட்டங்கள்
வெளிச்சம் மிக்க
ஒரே விளக்கு
நான் மட்டுமே
உன் அறையில்
வெட்கம் மிகுந்த
ஒரே இருட்டில்
நீ மட்டும்
என் பிடியில்
என்
முகத்தின் ஓரத்தில்
உன் விரல்கள்
நாண ரேகைகளோடு
நளினமாய்
ஒரு
நடை நடந்தேன்
கிழக்கு
உச்சி முதல்
மேற்கு
பாதம் வரை
என்
ஒளிக் கரங்களில்
ஒரு
வலை போட்டேன்
உன்னை
வாரி அணைத்து
ஆரமாய்
தழுவிக் கொண்டேன்
நம்
சதுரங்க ஆட்டத்தில்
சில
நட்சத்திரங்கள்
இடம் மாறின
பெரிய பெரிய
தடங்களைப் போல்
நாம்
எச்சிலில்
ஈரப் படுத்தினோம்
மேகத் தலையணையில்
முகம் பதித்து
மோக விளையாட்டை
மிகைப் படுத்தினோம்
தவறிய முத்துக்கள்
தரையில் சிந்தி
காலை
பனித்துளியாய்
கண் சிமிட்டின
ஒவ்வொரு நாளும்
உருக்குலைந்தேன்
ஒருசில நாளில்
உனக்குள் நுழைந்தேன்
நான் என்பதை
நானாக கலைந்தேன்
நீ என்பதில்
தானாக மறைந்தேன்
அமாவாசை இரவில்
நாம்
நம் ஆக்கிரமிப்பை
இடம்
மாற்றிக் கொண்டோம்
அடுத்தடுத்த
இரு நாட்களில்
அந்தரத்தில்
விடப்பட்டது
நட்சத்திர பந்தல்
வளர்பிறையில்
எழுகின்றேன்
வாரி
சுருட்டிக்கொண்டு
மீண்டும்
ஒரு
தேய்பிறையில்
தேய்ந்து போக !
No comments:
Post a Comment