Monday, March 28, 2011

துணிவு கொள்

மனமே 
துணிவு கொள் 
மலை அல்ல 
மடு என்று 
பணியச் சொல்
 
நினைவில் 
நிறுத்திக் கொள்
நீர் அல்ல 
நெருப்பு என்று 
நெஞ்சை 
நிமிர்த்தி செல் 

கொஞ்சம் 
அசந்தால் கூட
உனக்கு 
கொல்லி வைக்கும் 
உலகம் 

கொஞ்ச 
நேரத்திற்கு ஒருமுறை 
உன்னை
கிள்ளி பார்த்து 
தெளியும்

எங்கே
உன் 
போர் வாள்
எடுத்து 
வைத்துக் கொள் 
உலகமே 
ஒரு போர்க்களம்
 
எங்கே 
உன் 
பாதுகாப்பு கேடயம் 
கையில் 
எடுத்துக் கொள் 
வாழ்க்கையே 
ஒரு போராட்டம் 

அஞ்சி நடப்பவன்
தனக்கே தான்
அந்நியம் ஆவான்
என்றும்
கெஞ்சி வாழ்பவன்
உலகுக்கே உன்னை
எதிரி ஆக்குவான்

பயம்
உனக்கு நீயே
புகட்டிக் கொள்ளும்
நஞ்சு

பணிவு
தனக்கு தானே
அடித்துக் கொள்ளும்
சவுக்கு

உனக்கு
யாரும் இல்லையென
எண்ணாதே
உனக்காக
நீயே உள்ளாய் 
என்பதே உண்மை

துணைக்கு 
சொந்தம் இல்லையென 
சோர்ந்திடாதே
தூண் போன்று 
தோள்கள் இருப்பதே 
சுமை தூக்கத்தான்

ஒவ்வொரு நொடியும் 
கொடுத்துக் கொண்டிரு 
ஊக்க மருந்து 
இல்லையேல் 
உள்ளம் 
ஏங்கி ஏங்கியே     
தூங்கி போய்விடும் 
நிரந்தரமாய் !


Tuesday, March 22, 2011

துளிகள் - 8

கற்பு

உண்டென்றால் 
உன் உடையின் 
நூலிழை கூட 
நாணப்படும் 

இல்லை என்றால் 
என் எச்சிலில் 
நனைவது கூட
நாகரிகம்  !


வெட்கம் 

புதுமைப் பெண்ணின் 
பெருமை கண்டு 
குறுகி நிற்கும்  
ஆடையின் 
அளவில் மட்டும் 

புரட்சி பெண்ணின் 
வீரம் காக்க 
நிறைந்து நிற்கும் 
ஆடையின் 
நெருக்கத்தில் மட்டும் ! 


பார்வை
 
என்னை 
நீ பார்க்கையில் 
உன்னை 
நான் பார்க்கையில்
அர்த்தம் புரிகிறது 

அவள் 
என்னை பார்க்கையில்
நான் 
அவளை பார்க்கையில்
அர்த்தம் புரியவில்லை !


அவள் 

என்
வினாடிகளில்
பங்கு கேட்கும்
அதிகாரம் பெற்றவள் !


நொடி 

என்
வயது வகுபடும்
அதிகபட்ச நேரம் !

Monday, March 21, 2011

எந்தையே - 9

உன்னை 
என் இறைவனாக்கி 
தினமும் 
எண்ணி உருகுகிறேன் 

என்னை 
உன் பக்தனாக்கி 
நான்
நலம்பெற வேண்டுகிறேன் 

இன்னமும்
நான் மாறவில்லை 
உன்னிடமே 
வரம் கேட்கிறேன் 

என்னையும் 
நீ மறக்கவில்லை 
எனக்காகவே 
தவம் செய்கிறாய் 

என்னை 
அறிமுகப்படுத்தினாய் 
உன்னை 
தெரிந்தவர்களிடம் 

எனக்கு 
முகவுரை கூறினாய்
உனக்கு
முடிவுரை எழுதி 

உன் 
கரம் பற்றி 
வந்த என்னை 
என்
கரம் உயர்த்தி 
இளவரசன் என்றாய்

என் 
சிரம் தாழ்த்தி 
ஏற்கும் முன்னே 
உன் 
சிரம் சாய்த்து 
சிலையாகி போனாய்

எண்ணி வியக்கிறேன் 
உன் 
பாத சுவடுகள் 
இன்னமும் 
எனக்காக பயணிக்கின்றன 

கண்ணீர் விடுகிறேன் 
அவை 
காட்டும் சொந்தங்கள் 
எனக்காக 
தோள் சாய்க்கின்றன

அறுப்பத்தொரு ஆண்டுகள் 
நிரந்தரமின்றி 
ஊசலாடி இருக்கலாம்
உன் வாழ்க்கை
 
அடங்கி விடாத 
அதன் 
அதிர்வுகள் போதும் 
அடுத்த தலைமுறைக்கு 

உலகுக்கான 
என்னை உருவாக்கினாய் 
எனக்கான 
உலகை உருவாக்கினாய் 

இரண்டையும் 
ஒன்று சேர்க்கும் 
முன்பே 
இறைவனாகி போனாய் 

இன்று 
இணை கோடுகளாய் 
என்று 
இணைவோமென்று தெரியாமல் !

Sunday, March 20, 2011

சாயம் வெளுக்கிறது

கண்ணீர் கடலில் 
ஒரு தேசம் 
கடல் நீரில் 
கண்ணீரின் வாசம் 

பொங்கி எழுந்தது 
பூமி 
புதைந்து போனது 
ஆ சாமி 

பால் தெளித்து 
பாடையில் 
ஏற்றிக் கொண்ட 
பெருமை

கரையேறி வந்து
கையேந்தி 
பெற்றுக் கொண்ட 
கொடுமை 

அறிவற்ற மண் 
அறிவற்ற கடல் 
அறிவுள்ள மனிதன் 
அறிவுள்ள அறிவியல் 

இயற்கை நியதி 
யார் 
இங்கே நிரந்தர 
அதிகாரி 

பெற்ற தாய் 
பிள்ளைக்கு முன்பே 
இறப்பது 
உயிர்களின் விதி 

உயிர்களின் தாய் 
உலகை அழித்து 
உயிர் வாழ 
நினைப்பது 
தாய்மையின் சதி 

இறைவனாக 
முறையிட்ட போதும் 
இறங்கி வராத 
இயற்கை 

எமனாக 
குறைபட்ட போதும் 
மனம் மாறாத 
இயந்திரம் 

பரம்பரை சொத்து 
ஒரு முறையில் 
முடிந்தது - ஒரே 
ஒருமுறை சேர்த்தது 
மறுமுறையில் கரைந்தது 

நாட்டின் செல்வம் 
நடு வீதியில் 
நாடே இன்று 
நடு வீதி தான்

கட்டிடம் 
தேவையில்லை என்றால் 
கேட்பவர் 
யார் இங்கே 

குரங்கு 
மனிதர் நம்மில் 
மரத்தில் 
குடியிருப்பவர் யார் 

நாம் 
செயற்கையாக சேர்க்கும் 
அனைத்தும் 
இயற்கைக்கு எதிரானது 

இருந்தும் 
நாம் 
இயற்கையோடு இணைந்து 
வாழும் 
திறமையற்றவர்கள் 

காட்டில் வாழும் 
தகுதி இன்றி 
நாம் நாட்டுக்கு 
ஓடி வந்த 
நரி 

நம் 
அரச வேடம் 
கலைகிறது 
அதிகார சாயம் 
வெளுக்கிறது
 
அவ்வபோது 
அரங்கேறும்
இயற்கையின் 
கோரத் தாண்டவத்தில் !
 


ஒரு சாலை ஒரே சத்தம்

ஒவ்வொரு நாளும் 
பிறக்கிறது 
ஒரு நாள் 
சோதனையாக
 
ஒவ்வொரு நாளும் 
முடிகிறது 
வாழ் நாள் 
சாதனையாக  

உண்ணும் 
உணவில் கூட 
போராட்டம்
உண்பவன் 
யார் என்பதில் 

உண்டு 
முடித்தப் பின்னும் 
தகராறு 
உண்டது 
எது என்பதில் 

தண்ணீரும் 
மண்ணோடு சேர்ந்து 
மனம் நோக
செய்வதுண்டு
 
தென்றல் காற்று 
கூட  
தீண்ட தாகாமல் 
போவதுண்டு 

நாளை என்ற 
நம்பிக்கை மட்டுமே 
இன்றைய துன்பத்தை 
இன்பமாக்கும் மருந்து
 
உயிர் என்ற 
பொய் மட்டுமே 
உடல் ஊனத்தை 
மெய்யாக்கும் சிரத்தை 

ஒரே இடத்தில் 
நின்று
உயிர் வாழ 
உரிமை பெற்ற 
மரம் 
உயர்வான பிறப்பு 

ஓர் இடத்தில் 
நிற்க 
நேரம் இன்றி 
சுற்றி திரியும் 
என் 
சோகத்தை நினைத்தால் 

நிலையில்லாத வாழ்வில் 
நிலையானது 
நிலையில்லாத மாற்றம் 
மட்டுமே 

என் 
கவச குண்டலம் 
நான் 
சுத்தப் படுத்தும் 
என் கழிவறைகள் 

என் 
போதாத காலம்   
நான் 
பதிவு செய்யாத 
என் 
பிறப்பும் இறப்பும் 

கரை 
கட்டி தேக்கப்பட்ட
நீர் - பாசனம் 
செய்யப்பட வேண்டும் 
இல்லையேல் 
பாசி பிடித்துவிடும் 

வற்றாமல் ஓடும் 
காற்றாற்று வெள்ளம் 
வேலியிட்டுக்
கொள்வதில்லை 

என்றாவது 
வற்றிப் போனாலும் 
வேதனைப்பட்டு 
கொள்ளவதில்லை

விழுகிறேன் எழுகிறேன் 
அறிகிறேன் 
மீண்டும் விழலாம் 
மீண்டு எழலாம் 

மாண்டு 
போகும் வரை 
மாறி மாறி 
தேறி கொள்ளும் 
வாழ்க்கை 

முடிந்தவரை     
முயற்சி செய் 
உன்னால் 
முடிந்தவர்களுக்காக !

Thursday, March 10, 2011

எந்தையே - 8

உன் நினைவுகள் 
வரும் போது
என் உறக்கம் 
மறக்கிறேன் 

உன் கனவுகளை 
எண்ணும் போது 
நான் உலகை 
வெறுக்கிறேன் 
 
அகிம்சையை
போதித்து சென்றாய் 
உன்னை 
இம்சித்த உலகிற்கு
 
அன்பை 
புகட்டிச் சென்றாய் 
உன்னிடம் 
வம்பு செய்தவற்கு 

ஏழ்மையை 
பகிர்ந்து கொள்ளாமல் 
ஏழ்மையிலும் 
பகிர்ந்து உண்டாய் 

அதர்மத்தை 
கையில் எடுக்காமல் 
தர்மத்தை 
காப்பாற்ற துணிந்தாய் 

உறவுகள் 
ஏறி செல்ல 
ஒரு 
ஏணியாய் இருந்தாய் 

உன் மகனும் 
பெயர் சொல்ல 
இன்று 
தோணியாய் ஆனான்

நீ 
தோற்றது போல் 
ஒரு மாயை 
நான் 
தேற்றிக் கொள்ளும் 
ஒரு காயம் 

உன்னோடு முடிவது 
உன் கனவு 
என்றால் 
என் பிறப்பின் 
இரகசியம் என்ன 

இந்த உயிர் 
உனக்கானது 
இந்த உடல் 
உனக்கானது 

எந்தன் அறிவு 
உனை சார்ந்தது 
எந்தன் ஆற்றல் 
உன்னை போன்றது 

என் 
முதல் எதிரி 
நீ 
விட்டு சென்ற 
மிச்சம் 

உன் 
முதல் நண்பன் 
நான் 
பற்றிக் கொள்ளும் 
சொந்தம் 

நான் பிறக்காத 
உன் 
முதல் பகுதி 
உனக்கான 
என் விருப்பம் 

நான் பிறந்த 
உன் 
இரண்டாம் பகுதி 
எனக்கான 
உன் விருப்பம்

இரண்டிலும் இருவருமே 
தோற்றுப் போனோம் 
இருந்தும் 
இன்னமும் இருக்கிறது 
தூற்றுவார் நெஞ்சம் 

இரத்தமும் சதையுமாய் 
என்னோடு இருப்பதால் 
இருவரும் 
இணைந்தே போராடுவோம் 
போற்றுவார் போற்ற !

நானும் என் அழுகையும்

அழுகை தான் 
நான் 
உலகில் பேசிய 
முதல் மொழி 

அன்னையின் மடியில் 
அடம் பிடித்தேன் 
கண்ணீரை கொண்டு 
காரியம் சாதித்தேன் 

தந்தையின் பிடியில் 
தஞ்சம் அடைந்தேன் 
கண்களை கசக்கி 
தட்சணை பெற்றேன் 

குருவின் கோபத்தில் 
குறுகி நின்றேன் 
அச்சத்தில் அழுது 
ஆறுதல் பெற்றேன் 

ஆண்டவன் ஆலயத்தில் 
அர்ச்சனை செய்தேன் 
அழுது அழுது 
அருள்பாலிக்க சொன்னேன் 

இளைஞன் ஆனதால் 
எனக்கு நானே 
அழுது கொண்டேன் 
இருந்தும்
காதல் கொண்டதால்
கண்கள் குளமாகின

செய்யும்
தொழில் சிறக்க
அழுததுண்டு
தொழிலில்
பணம் பெருக
கண்ணீர் விட்டதுண்டு

பிள்ளைகளுக்காக
அழுதேன் - அவர்களை
பெரியவர்கள் ஆக்க
அழுதேன்

தொல்லைகளுக்காக
அழுதேன் - அவைகளை
தொலைத்து கட்ட
அழுதேன்

ஓய்வு
பெற்றப் பின்னும்
அழுதேன்
ஓயாத பசிக்காக

ஒருவாய்
உண்டப் பின்னும்
அழுதேன்
ஊசலாடும் உயிருக்காக

இறுதியாக அழுதேன்
இறந்த பின்
சுற்றி நின்றவர்கள்
கண்களின் வழியாக

இன்னமும் அழுகிறேன்
எஞ்சி நிற்கும்
என் நினைவுகளின்
கனவுகள் அழியாமல் !   
 

துளிகள் - 7

நான் பிறந்ததும் 
என் வாழ்வின் 
மணித்துளிகள்
இறக்க 
ஆரம்பித்துவிட்டன !

---------------x--------------------

விதியை 
மதியால் வெல்வதும் 
என் 
தலைவிதி தான் !

---------------x--------------------

வெறும் காகிதம் 
நான் 
எனக்குள் எழுதப்படும் 
கருப்பு வண்ண 
எழுத்துக்களே 
என் வாழ்க்கை !

---------------x--------------------

தோற்றப் பின்னும் 
வாழ்க்கை இருக்கிறது 
மீண்டும் 
தோற்பதற்கு
வாய்ப்பு இருக்கிறது !

---------------x--------------------

வாழ்வதற்காக 
பிறப்பவர்களை விட 
பிறந்ததற்காக 
வாழ்பவர்கள் அதிகம் !

---------------x--------------------

உன் உழைப்பின் 
ஊதிய உயர்வான 
ஒரு ரூபாய் 
உல்லாசத்தின் 
ஒரு படியில் 
விழுவதால் தான் 
இல்லாதவன் மடியில் 
இன்னமும் ஏழ்மை !

---------------x--------------------

உன்னால் 
கவனிக்கப் படாதவன் 
தான் 
பின்னாளில் 
உன் முன்னால்
நிற்கிறான் 

அவன் 
எதிராளி அல்ல 
உன்னால் 
ஏமாற்றப்பட்ட 
ஒரு ஏமாளி !

---------------x--------------------

பந்தைய களத்தில் 
உன்னை 
வெல்லப் போகிறவன் 
உன்
பக்கத்து வீட்டுக்காரன் !
 
---------------x--------------------

உண்மையில் 
உணவுப் பஞ்சமா 
உறைவிடம்
பற்றாக்குறையா 

ஏன் நமக்குள் 
இத்தனை போட்டி 
தான் என்ற 
தற்பெருமையே காரணம் !