Saturday, June 18, 2011

எந்தையே - 20

எங்கோ 
ஆந்தை அலறுகிறது 
கூட்டான் கூவுகிறது   

இது 
ஆவி நடமாடும் 
நேரம் என்கிறார்கள் 

அவர்களிடம் 
கேட்க தோணுகிறது
என் தந்தையை 
பார்க்க முடியுமா 
என்று      

அன்று 
என் தந்தை 
உள்ளே போ
என்றார்

இன்று
நான் 
வெளியே சென்று
பார்க்கிறேன்

இருட்டில்
அவர்
எங்கு இருக்கிறார்
என்று 

அவர்
சொல்லி தந்த
ஆவி பாடம்
அவராலேயே
உடைக்கப்பட்டு விட்டது   

கருமையான
இருள்
வெறுமையான
வானம்

வெள்ளை ஆடையுடன் 
மேகம்
கொலுசு சத்தமிடும்
வண்டுகள்

காற்றில் ஆடும்
மரங்கள்
கதவை தட்டும்
காற்று

குறி சொல்லும்
கோடாங்கியின்
நடு நீசி
நடமாட்டம்

எல்லாம் இருக்கிறது
உலகில்
இல்லாதவர்கள்
வருவதற்கான அறிகுறிகள்

கைபேசியில்
குரல் கேட்டே
குறை அறியும்
என் தந்தை

கண்ணீர் விட்டு
அழுதும் 
ஆறுதல் சொல்ல
வரவில்லையே    

இருக்கும் போது
இறந்ததாக காட்டிய
கனவு
இறந்தப் பின்
இருப்பதாக காட்டுகிறது     

இருப்பவர்கள்
இரைப்பை பசிக்காக
கூறும்
பொருளற்ற பொய்கள்

இறந்து போன
என் தந்தையை
ஒரு முறை
காண உதவாதா !

No comments:

Post a Comment