Tuesday, July 5, 2011

எந்தையே - 24

இருபத்தி எட்டு 
ஆண்டுகள் 
என்னையும் காத்து 
உன்னையும் காத்தாய்   

இப்போது 
ஏன் மறந்தாய் 
அப்போது போல் 
இருந்திட எண்ணாமல் 

இரண்டு ஐந்து
நாட்கள் 
என்னை இழந்து 
உன்னை காக்கவில்லை   

இப்படி 
ஒரு சோதனை 
எப்படி 
தரலாம் எனக்கு 

கல்லூரி 
முடித்தது முதல் 
காலச் சக்கரம் 
பின்னோக்கி நகர 

ஏங்கி
தவித்த நாட்கள் 
எவையும் 
எனக்காக அல்ல 

உன்  
தலை முடி 
நரை கண்ட 
என்மன தவிப்பது 

தமக்கையின் 
திருமணத்தில்
தடித்த 
கால் கண்டேன் 

முடியாமல் 
உன்னை 
நான் கண்ட 
முதல் முறையது

மனம் வருந்துவேன்
என்று  
மறைக்கப்பட்ட
பேருந்து விபத்துகள்

மறுமுறை நடக்காமல் 
இருக்க 
மன்றாட வைத்தது 
உன்னையும் தெய்வத்தையும்  

உதவிக்கு 
உறவுகள் இன்றி 
உபத்திரவத்திற்கு 
உற்றவர்கள் சேர
 
அருகில் இல்லாத 
இந்த மகன் 
ஆண்டவனைத் தான் 
நம்பி வணங்கினான்

வருத்தங்கள் 
குறையவில்லை  
உனக்கு வயோதிகம் 
வந்த பின்னும் 

பொறுப்புகள் 
வரவில்லை 
எனக்கு வாலிபம் 
பிறந்த பின்னும்            

சிறு வயதில்
நீரில் விழுந்து
ஒருமுறை
தேர்வு வைத்தேன்

பெரும் துன்பத்தில்
ஊரார்
தினம் தினம்
தேர்வு வைத்தனர்

வெற்றி பெற்றவன்
நீ
பெற்ற மக்களின்
உயிரை
பேணிக்  காப்பதில்

ஒரே முறை
தேர்வு வைத்தாய்
உடல் சோர்ந்து
உள்ளம் சோர்ந்து
     
மறந்து போனேன்
உனக்கு
ஊக்கம் தரும்
மருந்து கொடுக்க

இழந்து நிற்கிறேன்
இன்று
எந்தை இல்லாத
அநாதை என்று !

No comments:

Post a Comment