Wednesday, April 27, 2011

எந்தையே - 13

ஒரு 
விடியல் 
நீ எனக்கு 

ஒரே 
விடியல் தான் 
நான் உனக்கு
 
உன்
தொலை நோக்கு 
இலட்சியப் பார்வையின்
விலைமிக்க 
கண்ணாடி நான் 

என்னை 
அடிக்கடி துடைத்து 
அழகு செய்து 
அணிந்து பார்ப்பாய்
 
ஒருமுறையாவது 
உன் 
இலக்கை 
எட்டிவிடுகிறதா என்று
 
தன்னை தானே 
சுத்தப்படுத்திக் கொண்டு 
உன் சுமையை 
குறைக்க எண்ணினேன்
 
இருந்தும் 
இளமையில் பழுப்பேறி 
இயலாமல் அழுக்கேறி 
இன்றும் 
துடைத்துக் கொண்டே 
இருக்கிறேன் 

பொறுத்து பார்த்தாய் 
புலம்பி பார்த்தாய் 
புரியாமல் 
வெறுத்துப் பார்த்தாய் 

உன் கண்ணின் 
ஒளி மங்கும் 
காலத்தில் 
ஒருநொடி யோசித்தேன் 

இந்த கண்ணாடி 
நீ 
உலகை காணவாவது
உதவுமா  என்று 

எதிர் பாராத 
நேரத்தில் 
எதையும் 
எதிர் பார்க்காமல் 

என்னை 
தனியே 
விட்டு விட்டு 
சென்றவரே 

ஒருநாள் 
உன் இலட்சிய 
இலக்கை 
நிச்சயம் எட்டும் 

இந்த 
மூக்கு கண்ணாடி 
உலகின் 
கண்களுக்கு முன்னாடி   
 
அன்று 
யாருக்கும் பொருந்தாத 
இந்த கண்ணாடி 
ஒரு 
தொலைநோக்கியாகத்  தான்   
வாழும் 

தன்
இரண்டு விலைமிக்க
கண்ணாடி கரங்களையும் 
ஒன்றாக்கி 
உன்னை வணங்கியபடியே !

Friday, April 22, 2011

எந்தையே - 12

அவ்வபோது உடைகிறேன் 
அவசரமாய் அழுகிறேன் 

எப்படி 
உன்னை இழந்தேன் 
என்று 
இன்றும் யோசிக்கிறேன் 

என்னோடு 
நீ இருக்கிறாய் 
என்று 
இன்னும் நம்புகிறேன் 

உன் முகம்
பார்க்க
எண்ணும் போதும்

உன் குரல்
கேட்க
எண்ணும் போதும்

நீ
இல்லை என்ற
உண்மை
நெஞ்சில் ஈட்டியாக
பாய்கிறது

எரியும்
உன் சிதை
இன்னும்
அணையவில்லை
என் இதயத்தில்

கருகிய
உன் உடல்
இன்றும்
கூறாகி நிற்கிறது
என் உள்ளத்தில் 

உன்னை
மறந்து போன
உலகத்தை
நினைத்து பார்க்க
பிடிக்கவில்லை

உன்னை
நினைத்து வாழும்
உள்ளத்தை
நெருங்கி நிற்க
முடியவில்லை

வெறும்
கூட்டு  கணிதமாய்
என்
வாழ் நாள்

பெரும்
பிழை பட்ட
சூத்திரமாய் 
என்
மனக் கணக்கு

மனம் விட்டு
அழுகிறேன்

என்
மனக் கவலையில்
உன்னை
மறந்து விட்டேனே
என்று 

உன்
மகனாக இருந்தும்
உன்னை
இழந்து விட்டேனே
என்று !

Tuesday, April 12, 2011

கா.தலைவன் - 5

நான் 
தூக்கத்தில் சிரிக்கிறேன் 
என் 
துக்கத்திலும் ரசிக்கிறேன் 

காதல் 
என்பது கொடுமை 
காதலன் 
என்பவன் அடிமை
 
என் 
இரவுகள்
என்னை இம்சிக்கின்றன 
நீ 
இல்லையென்றால் 

என் 
பகல்கள் கூட   
என்னை பரிகாசிக்கின்றன 
உன்னை 
பார்க்கவில்லை என்றால்

இளமை 
முறுக்கேறும் நேரத்தில் 
உன் 
நினைவுகளில் 
சறுக்கிவிடுகிறேன்

கடமை 
அரங்கேற்றும் காலத்தில் 
உன் 
கனவுகளில் 
கருகிவிடுகிறேன் 

எங்கோ 
தூர தேசத்தில் 
நீ 
இருக்கின்றாய் 

இங்கே 
உன்னை 
துரத்தி பிடிக்க 
நான் 
நினைக்கின்றேன்

தெளிந்த போதெல்லாம் 
தேடுகிறேன் 
எந்த வழியாக 
எனக்குள் 
வருகின்றாய் என்று 

தொலைந்த போதும் 
துளாவுகிறேன்
எனக்குள் 
திறந்த வழி 
எது என்று 

என் கட்டிலில் 
உன் 
நினைவுகள் 
கட்டப்பட்டு 
கிடக்கின்றன 

என் 
அறை முழுவதும் 
உன் 
ஆசைகள் 
அடைக்கப்பட்டு 
கிடக்கின்றன 

என் 
சுவாச பையில் 
மூச்சுக் காற்றோடு 
அடைத்து நிற்கின்றது 
உன் 
முக தரிசனம் 

என் 
உணவுக் குழியில் 
சீரண சக்தியோடு 
செரிமானமின்றி எரிகிறது 
உன் 
காதல் நினைவுகள் 

அவ்வ போது
புரை ஏறுகிறது 
அடைச்சலும்
எரிச்சலும் 
உடைந்து போய் 

அவசரமாய் 
கண்ணீர் வருகிறது 
முகமும் 
நினைவும் 
முற்றி போய்   

உலகிலேயே 
அதிகமாக 
அடிமைப்பட்டு 
கிடப்பவனும் 
நான் தான் 

ஒவ்வொரு நாளும் 
உன் 
நினைவுகளிடமிருந்து
விடுதலை பெற 
போராடி போராடி 
தோற்று போகிறவனும் 
நானே தான்  !
     

Wednesday, April 6, 2011

எந்தையே - 11

நான் நினைப்பது 
எதுவும்
நடப்பதில்லை என்று 
என்னை 
அடித்து சொன்னாய் 

நீ ஆசைப்பட்ட 
வாழ்க்கை 
அமையவில்லை என்று 
உன் 
அடிகளில் உணர்ந்தேன் 

சம்சாரி 
வாழ்வை கூட
ஒரு 
சந்நியாசி போல் 
வாழ்ந்தவன் நீ 

சம்சார 
மகிழ்வை கூட   
ஒரு 
சாணக்கியம் போல் 
செய்தவன் நீ

மனைவி 
மக்களை விட 
வேறு 
சாதனைகள் எதுவும் 
செய்யாதவன் நீ 

எங்களை 
காத்து அருள்வதை
பெரும் 
கடமையாக எண்ணி 
சாதித்தவன் நீ 

ஊருக்காக
ஒருமுறை வாழ்ந்தாய் 
உறவுக்காக 
ஒருமுறை வாழ்ந்தாய் 

மனைவிக்காக 
ஒருமுறை வாழ்ந்தாய் 
மக்களுக்காக 
ஒருமுறை வாழ்ந்தாய் 

உனக்காக 
ஒரே ஒருமுறை 
வாழ 
ஆசைப்பட்டாய் 

உன் 
பெற்ற கடனை 
முடித்து விட்டு 
பிள்ளை 
அரவணைப்பில்   
பெருமை கொள்ள 

உலகம் 
புரிந்து 
கொள்ளவில்லை 
உன் 
பெருமையை 

உறவுகள் 
அறிந்து 
கொள்ளவில்லை 
உன் 
அருமையை 

இறுதி வரை 
எல்லோரும் போற்ற 
விரும்பி 
எண்ணற்ற தூற்றல்கள்
பெற்றாய்

அப்பா 
நீ ஒரு 
அப்பாவியாய் 
இருந்தாய் 
ஆயிரக்கணக்கான 
பாவிகள் மத்தியில் 

உன் 
நன்மைகள் யாவும் 
அபகரிக்கப் பட்டு 
தீமைகளாக 
திரிக்கப் பட்டுவிட்டன

இன்று 
திரிசங்கு நிலையில் 
இருக்கிறது
உன் உண்மை 

உன்
உண்மையை காத்திடவே
நானொரு
சொர்க்கம் அமைப்பேன்
இந்த
உலகம் உணர !

Sunday, April 3, 2011

எந்தையே - 10

ஆண்டு அனுபவித்து
அமைதியாக
கண்கள் மூடி
கடந்த கால
நினைவுகளில் ஆழ்ந்திருப்பாய்

உன் பேரன்
ஓடி வந்து
நிகழ்காலத்தின்
அவசியத்தை
நினைவு படுத்துவான்

பெற்ற மகனிடமே
முறைத்து கொண்டு
பெரிதாக
வெறுத்துக் கொள்வாய்

உற்றார் உறவினர்களிடம்
உன் மகனுக்கு
அனுகுமுறை
சொல்லிக் கொடுப்பாய்

தள்ளாத வயதில்
தள்ளாடி நடந்து
பொல்லாத உலகத்திடம்
புது பட்டம்
பெற்றுக் கொள்வாய்
கிழவன் என்று

இல்லாதவன் போல்
எளிமையாக இருந்து
இருப்பதையும் பங்கிட்டு
உனக்கே நீ
பகிர்ந்தளித்துக் கொள்வாய்
இன்னொரு வேளைக்கு 

அன்னையிடம்
அடிக்கடி
முறைத்துக் கொள்வாய்

அனைவரிடமும்
அதிகமாக
கடிந்து கொள்வாய்

இறுதியாக
உனக்கு நீயே
உறுதி
செய்து கொள்வாய்

இது
என்றும் திருந்தாத
புது
உலகம் என்று

என்
அன்றாட கனவுகளில்
அதிகமாக
வந்து போன
உன்
இன்பம் பொங்கும் 
எதிர்காலம்
இது தான் 

எப்படி
அறுக்க பட்டது
இந்த நினைவுகள்

யாரால்
நொறுக்கப் பட்டது
என் கடமைகள்

இன்று
அறுபது வயது
கடந்தவரை கண்டால்
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்

உங்கள்
மூத்த குடிமக்கள்
சமூகத்தில்
ஒருவருக்கு
இடம்
மறுக்கப் பட்டுவிட்டதே
என்று !