Sunday, May 22, 2011

எந்தையே - 15

நான் 
கடவுளின் பிள்ளை 
என்று 
நம்பி இருந்தேன் 

யார் அந்த 
கடவுள் 
என்று தெரியாமல் 
குழம்பி நின்றேன் 

சிவனைப் பிடிக்கும் 
எனக்குள் 
கமலக் கண்ணனும் 
இருந்தான்

முருகன் துணை 
என்றேன் 
விநாயகனை வலம்
வந்தேன்  

இயேசுவின் கிருபை 
கிட்டியதுண்டு 
மாதாவின் மணியோசை 
கேட்டதுண்டு 

அல்லாவை கூட
தொழுதிட 
ஆசைப்பட்டேன் 

எல்லோரையும் 
ஒன்றாக்கி 
ஓம் 
சக்தி மந்திரத்தை 
உருவாக்கினேன்
 
தாய் தான் 
உலகம் என்று 
உடன் அழைத்து 
உருகி நின்றேன்
 
என் 
நன்மை தீமை 
இரண்டையும் 
உரிமையுடன் 
ஒப்புவித்தேன் 

நான்
தவறு செய்தால் 
தரும் 
தண்டனையை 
தாங்கிக் கொண்டேன்     

கோயில் 
பெரிதென்று 
எண்ணவில்லை 
என் 
மனதில் குடியிருத்தி
மனம் மகிழ்ந்தேன்  
 
நினைத்தாலும் 
நினைக்காவிட்டாலும் 
வணங்கினாலும் 
வணங்கவிட்டாலும்
 
என்னை 
மறந்திட மாட்டாய் 
என
மனதார நம்பினேன் 

அடிகள் 
விழுந்த போதும் 
அவை 
தடுக்கப்பட்ட போதும் 

நான் 
உன் மகன் 
என்னை 
அடிப்பவனும் நீயே 
அணைப்பவனும் நீயே
 
என்று 
இருமாத்து நின்றேன்
உன்னை
மனமுவந்து தொழுதேன்
 
இருந்தும் 
அவ்வ போது
நெருடியது 
யார் அந்த 
சக்தி என்று 

சிவனா
கண்ணனா 
முருகனா 
விநாயகனா 
இயேசுவா 
அல்லாவா 

நான் 
மகனென்று நம்பும் 
என்
இறைவன் யார் 

எந்தையே 
உன் 
இறப்பிற்கு 
பின் தான் 
உணர்ந்தேன் 

நீ தான் 
என் கடவுள் 
என்று 

நான் என்றும்
உன் மகன் 
என்று 

அன்றும் 
இன்றும் 
என்றும் 

என்னை 
பின் தொடர்வது  
உன் 
ஆன்ம சக்தியே !
       
  

   
        

எந்தையே -14

இலக்கு இல்லாமல் 
தவிக்கிறது 
இந்த ஏவுகணை 

இதை 
எய்திட வேண்டியவன் 
இறந்து போனதால் 

தானியங்கி தான் 
என்றாலும் 
தான் இயங்கும் 
காலம் எது 

நானியங்கி தான் 
என்றாலும் 
நான் இயங்கும் 
களம் எது 

உன் போராட்ட 
வாழ்வில் 
புண்பட்டு விழுந்தாய்  
ஊரார் 
கண்பட்டு வீழ்ந்தாய்
 
உன் போர்களத்தில் 
தீட்டப்பட்ட 
கூர்வாள் நான் 

நன் மதிப்பில் 
நவீனப் 
படுத்தப்பட்ட  
வன்கணை நான் 

இதன் 
செயல் வடிவங்களின் 
சிற்பி நீ
 
என் 
செயலிகளின் 
சிற்பம் நீ 

உன் 
சொற்ப பொருட்களில் 
உருவாக்கப்பட்ட 
அற்பன் நான் 

என் 
அற்ப குறிகளில் 
அகப்பட்ட 
சொற்ப உலகமிது 

அழுகை 
அடங்கிக் கொண்டு 
வருகிறது 

ஆத்திரம் 
தொடங்கிக் கொண்டு 
வருகிறது 

எதிரிகள் 
என்னை சுற்றி 
வருகிறார்கள் 

எதிர்ப்புகள் 
என்னை பற்ற 
வருகிறது 

சரியான உதவும் 
கருவிகள் 
பொருத்தப் படாததால்

விரைவாக 
நிறைவேற்ற முடியாமல் 
உன் கட்டளைகள் 

நல்லவர்கள் 
கெட்டவர்கள்
நண்பர்கள் 
எதிரிகள் 

எல்லோரின் 
எதிர்பார்ப்பும் 
இது தான் 

இந்த 
ஏவுகணை 
என்ன செய்யும் 

இந்த நேரத்தில் 
என் 
உறுதிமொழி 
ஒன்று தான் 

இது ஒரு 
தானியங்கி எந்திரமாக 
உருவாக்கப் பட்டுள்ளது 

எய்தவனின் 
இறக்கும் கால 
இயற்கையையும் 
கருத்தில் கொண்டு ! 
      

Monday, May 9, 2011

கா.தலைவி - 6


இதயம்
இடி இடிக்கிறது
இமைகள்
துடி துடிக்கிறது

இன்று
அவனை மீண்டும்
காணப் போகிறேன்    
என்று
எண்ணும் பொழுது

என்னை அறியாமல்
என்
நிலை மறக்கிறேன்

எனக்கே தெரியாமல்
நான்
எனை மறக்கிறேன்

ஊர் சென்று
திரும்பும் வரை
என்ன செய்திருப்பான்
என்
பெயர் கூட 
தெரியாமல்

மறந்திருப்பானோ
வேறு
பெண்ணை
நினைத்திருப்பானோ  

ஒரு கணம்
கண்கள்
கலங்கிவிட்டேன்

இனம் புரியா
வலியில்
அழுதுவிட்டேன்

பெண்ணாகி 
போனதால்
உன் முன்னே
சிலையாகி போகிறேன்

விருப்பு வெறுப்பு
எதுவும் சொல்லாமல்
உன்னை நெருப்பில்
நிறுத்துகிறேன்

பொங்கி வழியும்
என்
ஓர விழிப்பார்வையில்
உள்ளம்
அறிய துடிக்கிறாய்

ததும்பி வழியும்
என்
இறுக்க புன்னகையில்
உன்
எதிர்காலம் கணிக்கிறாய்

என்னப்
பெண்ணிவள் என்று
ஒருமுறை
நினைத்திருந்தால்
எந்த பெண்ணுக்கும்
காதல் கிடைத்திருக்காது

என்ன
செய்ய நான்
முகவரி தெரியா
உன் காதல்
என் முகவரி
மாற்றும் சக்தியுடையது

மவுனம் தான்
என்
மனதின் தூதுவன்
முடிந்தால்
மொழி  பெயர்ப்பு
செய்து கொள்

காத்திருப்பு தான்
என்
கன்னி ஆயுதம்

திருமணத்தில்
பறிக்கப்படும் முன்
நிருபித்து விடு
நீ எனக்கானவன்
என்று !

 

Sunday, May 8, 2011

இரவின் உறவு

நான் 
உன்னை பார்க்கையில் 
முழு நிலவாய் 
இருந்தேன் 

நீ 
என்னை பார்த்ததும் 
பிறை நிலவாய் 
தேய்கிறேன்

என் 
வானம் நீ 
உன் 
இரவில் நான்

விண்மீன் பூக்கள்
வானளாவிய
வாடா
மலர் அலங்காரம்

வீசி எறிந்த
தலையணைகள்
போல்
மேக கூட்டங்கள்   

வெளிச்சம் மிக்க
ஒரே விளக்கு
நான் மட்டுமே
உன் அறையில்

வெட்கம் மிகுந்த
ஒரே இருட்டில்
நீ மட்டும்
என் பிடியில்

என்
முகத்தின் ஓரத்தில்
உன் விரல்கள்
நாண ரேகைகளோடு

நளினமாய்
ஒரு
நடை நடந்தேன்

கிழக்கு
உச்சி முதல்
மேற்கு
பாதம் வரை      

என்
ஒளிக் கரங்களில்
ஒரு
வலை போட்டேன்

உன்னை
வாரி அணைத்து
ஆரமாய்
தழுவிக் கொண்டேன்

நம்
சதுரங்க ஆட்டத்தில்
சில
நட்சத்திரங்கள்
இடம் மாறின

பெரிய பெரிய
தடங்களைப் போல்
நாம்
எச்சிலில்
ஈரப் படுத்தினோம்    

மேகத் தலையணையில்
முகம் பதித்து
மோக விளையாட்டை
மிகைப் படுத்தினோம்

தவறிய முத்துக்கள்
தரையில் சிந்தி
காலை
பனித்துளியாய்
கண் சிமிட்டின
  
ஒவ்வொரு நாளும்
உருக்குலைந்தேன்
ஒருசில நாளில்
உனக்குள் நுழைந்தேன்

நான் என்பதை
நானாக கலைந்தேன்
நீ என்பதில்
தானாக மறைந்தேன்

அமாவாசை இரவில்
நாம்
நம் ஆக்கிரமிப்பை
இடம்
மாற்றிக் கொண்டோம்

அடுத்தடுத்த
இரு நாட்களில்
அந்தரத்தில்
விடப்பட்டது
நட்சத்திர பந்தல்

வளர்பிறையில்
எழுகின்றேன்
வாரி
சுருட்டிக்கொண்டு   

மீண்டும்
ஒரு
தேய்பிறையில்
தேய்ந்து போக !