Thursday, July 21, 2011

எந்தையே - 31

நேர்த்தி கடனாக

நீண்ட தாடி - நல்ல

நேரம் தவறாமல்

சிறந்த படையல்


அப்பனே முருகா

என்று

அன்றாடம் வணங்கி

மன்றாடும் விழிப்பு


திருப்பம் தேடி

திருப்பதி தரிசனம்

திருமால் அருளுக்கு

திருமலை ஏற்றம்


பழனி ஆண்டிக்கு

பக்தி மொட்டை

பால முருகனுக்கு

பரவச காவடி


ஆபத்து காத்த

விநாயகர்

அருள் வழங்க

அன்றாடம் பால்


அர்ச்சனை தட்டுடன்

உண்டியல் காணிக்கை

மூன்று முறை

வேண்டுதல் வலம்


வேதனை வந்தும்

சோதனை என்றாய்
விதியால் நொந்தும்
வேலனே என்றாய்

துணைக்கு ஆளின்றி
தெய்வத்தை நாடினாய்
தனிமையில் நின்றபடி
தண்டம் பணிந்தாய்

சிறு பிரிவுகளில்
திருநீறு பூசினாய்
மறக்காமல்
மடித்து கொடுத்தாய்

புது தொடக்கத்தில்
புகைப்படம் வைத்தாய்
பூசை அறையில்
புத்தகத்தை வைத்தாய்

துன்பம்
தீர்ந்திட பூசை
இன்பம்
சேர்ந்திட ஆசை

மகன்
படித்திட கோரிக்கை
வேலை
கிடைத்திட காணிக்கை

பால் தொழிலை
நிறுத்திய பின்னும்
காலை தவறாமல்
கடவுளுக்கு படைத்தாய்

கண்காணாத இடத்தில்
கடமை ஆற்றும்
கடைசி மகனை
கண்ணிமையாய் காத்திட

என்ன செய்தான்
உன் இறைவன்
என்ற கவலை
என்று தோன்றியது

உன் மகன்
தனிமையில் நிற்கிறான்
என்ற நிலைமை
என்று தெரிந்தது

முன்னேற்ற தடைகள்
என்னை
பின்னோக்கி இழுப்பதை
கண்ணால் கண்டாயோ

கடவுளே கடவுளே
என்றாலும்
காரியம் நடக்காததை
அறிந்து கொண்டாயோ

உன்னையே இழந்து
எனக்கு
ஒரு தெய்வம்
ஆகிவிட்ட எந்தையே

இருந்து செய்த
கடன் பெறாமலே
இறந்து செய்ய
புறப்பட்டது ஏன் !

1 comment:

  1. மகன்
    படித்திட கோரிக்கை
    வேலை
    கிடைத்திட காணிக்கை...nice dear..

    ReplyDelete