Sunday, June 19, 2011

எந்தையே - 21

உன்
மனைவியின் தயவில்
மனைக்கு
மனு போட்டு

உருகி உருகி
உள்ளே நுழைந்த
ஊர்
நீர்த்தேக்க தொட்டி

உன்னை
வெளியேற்றி விட்டு
இன்னும்
இருக்கிறது ஒட்டகமாக  

கருவறை மறக்காத
கத்துக் குட்டி
முதல்
கல்லறை அழைக்கும்
கிழக் கட்டைகள்
வரை

காண்போரிடம் எல்லாம்
நீ
தவறிழைத்தாய் என்று
சொல்ல

காது பட
நண்பன் கேட்டான்
என்ன
தவறு என்று

உன் 
இறப்பிற்கு பின்னும் 
இன்னும் 
இறுமாப்பாய் நிற்கும்

நீர்த்தேக்க தொட்டி 
தான் 
சொல்ல வேண்டும் 
என்ன குறை 
உன்னிடம் கண்டதென்று
 
அண்ணன் 
அறியாத சிறுவனாக 
இருந்த பொழுது 
ஊர் தண்ணியில் 
நஞ்சு ஊற்றியதாய்
பொய் உரைத்தனர் 

ஊர் கண் 
பார்த்திருக்கும் 
அதை 
அவன் கண் 
பழுதடைந்தது 
யார் வதை 

நியாயம் கேட்டு 
நீதி மன்றம் 
படி ஏறினாய் 
அநியாயமாய் 
உன்னை 
மிரட்டிப் பார்த்தனர்
 
என் ஆசை 
மிதி வண்டியை 
நான் காண 
பறித்துச் சென்றனர் 

ஊருக்கு நீருற்றிய 
பாவம் தீர்க்க 
வழக்கறிங்கருக்கு
பால் ஊற்றினாய் 

ஒரு ஊருக்காக 
ஒரு குடும்பம் 
பலியிடப் பட்டது 
நீதி தேவதைக்கு 

மனமுடைந்து 
மனைவியோடும் 
மக்களோடும் 
அன்றே 
மாண்டு போக
தோன்றிய துணிவை

அன்னை
ஆறுதல் சொல்லி
தேற்ற பணிந்ததால் 
உன்னை மட்டும்
இழந்தோம் இன்று  

தமக்கை சொன்னாள்
தண்ணீர் தொட்டி
அருகில்
உனக்கொரு சமாதி
அமைத்திருக்கலாம்
என்று

நான் நினைக்கிறேன்
நீர்த்தேக்க தொட்டி
பார்க்க
உனக்கொரு கோவில்
கட்ட வேண்டும்
என்று ! 

No comments:

Post a Comment