Friday, January 21, 2011

இன்றைய நாள்

ரோஜா
மொட்டொன்று
முள் செடியில்
பூத்திருக்கும்

பார்ப்பதற்கு வந்த
பனித்துளிகள்
முத்தமிட்டு
மெய் மறக்கும்

வெட்கத்தில்
சிவந்த இதழ்கள்
பூவாய்
மலர்ந்திருக்கும்

விடியலில்
தோன்றும் வெயில்
விரல்களால்
வருடிச் செல்லும்

இரவுக்குள்
இறக்கப்போவது
நிச்சயம்

இருந்தும்
இனம் புரியாத
ஒரு அச்சம்

இப்படியே
இருந்து
உதிர்ந்து போகலாமா

அப்படியே
விழுந்து
பதியப் போடலாமா

மாலையுடன்
சேர்ந்து
மணந்து சாகலாமா

மங்கையுடன்
கூடி
மணத்து வாடலாமா

விதைகளாகும்
மலர்களாய்
பதப்படுத்த படலாமா

விருந்தாகும்
பூக்களாய்
காட்சியாகி விடலாமா

அதிர்ச்சி
மரணமாய் - ஒரு
அதிகார
கை பறித்து
கசக்கி
எறியப்படுவதும்
கண்ணீர் கலந்த
உண்மை !


Tags: day,roja,tamil,kavi,kavithai,poem

No comments:

Post a Comment