Friday, January 28, 2011

எந்தையே - 4

உன்
பூர்வீக கிராமத்தில்
புழுதி மண்ணில்
விழுந்து
புரண்டு கொண்டிருந்தவனை

இறுக
பற்றி எடுத்து
தூசு தட்டி
தோள் மீது ஏற்றி
பள்ளிக்கு அனுப்பினாய்

சிறு பிள்ளை
தனமாய்
தெருவில் சுற்றிய
என்னை

முறைத்துப் பார்த்து
கண்டித்திருக்கிறாய்
கேட்காத போது 
தண்டித்திருக்கிறாய்

என்
சின்ன பாதங்கள்
ஏறி ஆடியது
உன் முதுகில்
மட்டும் தான்

என்
பிஞ்சு கரங்கள்
இறுக பிடித்தது
உன் இடுப்பை
மட்டும் தான்

நீருக்குள் முழ்கி
தத்தளித்த என்னை
நீந்தி பிடித்து
கரை சேர்த்தது
நீ தான்

கவலைகள் உன்னை
அலைகழித்த போதும்
கவலைகள் இன்றி
என்னை வளர்த்தது
நீ தான்

சொந்தங்களை விட
சொத்துக்களை விட
என்னை தான்
எண்ணினாய்
மலை போல்

கடன்களை பெற்று
நிலங்களை விற்று
எனக்கு தான்
செய்தாய்
கடல் அளவு

உன்
தங்கங்களை
எனக்களித்து விட்டு
என்
எச்சிலை
உண்டவன் நீ

உன்
காலங்களை
எனக்கழித்து விட்டு
என்
கால்களை
அமுகியவன் நீ

ஒரு
இளைஞனாக
எழுந்து நின்றேன்
உன்னை
கிழவனாக
மாற்றி விட்டு

ஒரு
மனிதனாக
மாறி நிற்கிறேன்
உன்னை
மண்ணுக்குள்
அனுப்பி விட்டு !


Tags: father in my child,life with my father,tamil,kavi,kavithai,poem

1 comment: