Friday, January 21, 2011

மரணப் படுக்கை

காரணமில்லாத
கண்ணீர் படுக்கை
பல
காரியம் செய்த
காரணப் படுக்கை

உண்மைகள்
கோடி
உவமைகள் சொல்லும்

உள்ளத்தில்
ஆயிரம்
உருவகம் எழுதும்

பொய் முகம்
கழுவும்
மெய்யான வருத்தம்

பூமியை
தழுவும்
பூவுடல் மோட்சம்


காலடி
தடத்தின்
ஏளனப் பார்வை

கைத் தொடும்
தூரத்தின்
கரவொலி சிரிப்பு

விழி கூட
துரோகம் செய்தது
மொழி கூட
மவுனம் சாதித்தது

செவிகள்
செவிடாகி போனது
சிந்தனை
செயலிழந்து போனது

வெறும்
சதை பிண்டமாய்
ஒரு
வாழ்க்கை

பெரும்
சாப கேடாய்
ஒரு
வாழ் நாள்

மவுனம்
அதிகமாக பேசுகிறது
மனம்
அமைதியின்றி தவிக்கிறது

சாதனைகள்
கை கட்டி
நிற்கின்றன
சோதனைகள்
வாய் பொத்தி
செல்கின்றன

காலம்
பார்த்து பார்த்து
நகர்கின்றது
காலன்
நகர்ந்து நகர்ந்து
வருகின்றான்

பாவங்கள்
சேர்ந்து கொண்டன
பாவமாய்
கடமை நின்றது

உரிமையாய்
மரணம் வந்தது
உறவிழந்து - ஒரு
உலகம் நின்றது

இது
அழியும் உடலின்
ஆயுள் படுக்கை
அழியா உயிரின்
மரணப் படுக்கை !


Tags: death,bed,kavi,kavithai,poem,tamil

No comments:

Post a Comment