Saturday, February 5, 2011

சிநேகிதியே

நிலையில்லை
எனினும் நினைத்தேன்
நம் நட்பு
நிலை பெறுவதற்கு

வலியில்லை
எனினும் உணர்கிறேன்
ஒருசில நொடிகள்
உடைவதைப் போன்று

அறிமுகம் தான்
நம் ஆரம்பம்
புரிதல் தான்
நம் பழக்கம்

மரியாதை தான்
நம் முதல்படி 
மனநிறைவு தான்
நம் அடுத்தகட்டம்

உலகம்
விழித்து கொண்டது
முகத்தை
சுழித்துக் கொண்டது

நிலையை
எடுத்துச் சொன்னோம்
நினைவை
மாற்றச் சொன்னோம் 

எச்சரிக்கை உணர்வோடு
இரண்டாம் கட்டம்
இன்னும் இயல்பாக
இணைந்த நட்பு

எதிரியை போன்று
குற்றம் சுமத்தினோம்
இருந்தும் நிறைவாக
முறுவல் கொண்டோம்

பிடிவாதம் கூட
பிடிக்காத காரணம்
சுயமரியாதை கூட 
நயவஞ்சக சாட்சி

பெரிதாக ஒன்றுமில்லை
பேசுவதை தவிர
புதிதாக ஏதுமில்லை
பழகுவதை தவிர

உண்மை எதுவென்று
உரக்க சொன்னோம்
உள்ளம் நினைப்பதை
மறக்க சொன்னோம்

எண்ணத்தில் வேற்றுமை
எழுந்த பின்பு
கருத்தில் மாற்றங்கள்
கலந்து போயின

தவறேதும்
இல்லை என்றாலும்
தவறேதும்
நிகழக் கூடாதென்று

இறுதியான
பிரிவைப் பற்றி
யோசித்தோம்
உறுதியான
முடிவாய் இருக்க
யாசித்தோம்

மூன்றாம்
மனிதர்களை போல்
மீண்டும்
ஒரு சிநேகம்

மெல்ல
புரிந்தது போல்
உள்ளம்
வலியை உணர்ந்தது

இனி
உலகம் ரசிக்கும்
நம்
உறவை மதிக்கும்

இது
வெறும் தெரிதல்
என்று
எண்ணி தெளியும்

நேற்று வரை
கொண்ட நட்பு
காற்றுடன் கலந்து
மூச்சை அடைக்கிறது

கனவாய் கருகும்
உண்மை சிநேகம்
நினைவில் நிறைந்து
நெஞ்சை உடைக்கிறது !

1 comment: