Friday, February 11, 2011

விலை கொடு

என்ன
செய்ய நான்
இன்றைய பசிக்கு

கவிதை
எழுத தான்
நினைக்கிறேன்

இருந்தும்
என் வார்த்தைகள்
வாக்கியங்களை தான் 
நிரப்புகிறது
வயிற்றை அல்ல

நல்ல கவிதைகள்
என்ன
விலை போகும்

உள்ள கவலைகளின்
உண்மை
மருந்தென்ன

இவை
விற்பனைக்கு அல்ல
என்றால்
இவன் 
விற்பனைக்கு உள்ளாவான்

பெற்ற குழந்தை
எனக்கு
புகழ் சேர்க்க
ஆசை

பெற்ற வயிறு
தனக்கு
கூழ் கேட்கும்
அவலம்

பாரதியின் பசிக்கு
அவன்
பாடல்கள் கூட
சோறு
போடவில்லை

பாவேந்தர்கள் பலரும்
தங்கள்
பாக்களை மட்டுமே
வறுமையின்றி
வைத்திருந்தனர்

சிந்திப்பவனின்
செல்களுக்கு செயலாற்ற 
நேரம் கிடைப்பதில்லை
செயல்படுபவன்
திசுக்களுக்கு சிந்திப்பதற்கு
காலம் இருப்பதில்லை

சத்திரியனும்
சாணக்கியனும்
ஒருவனாக இருப்பது
சாத்தியமில்லை

இருவரும்
ஒருவராக முயன்றால்
உள்ளத்தின் மவுனம்
உடைந்து போகும்

என் கவிக்கு
இங்கே
என்ன வேலை

எந்த விலை
என் கவியை
ஈடு செய்யும்

கசப்பு
மருந்து தான்
கவிதை படிப்பது

கடினமான
ஒன்று தான்
கருத்தை அறிவது

பொறியியல் படிப்பு
ஊருக்கு மதிப்பு
உள்ளத்தின் கவிதை
யாருக்கு தெரியும்

பொருட்களின் மதிப்பு
வீட்டுக்கு பெருமை
உறக்கம் இழந்தது
யாருக்கு புரியும்

வெறும்
போட்டியை நம்பி
பொறாமையில் ஓடும்
பொய்யர்கள் உலகம்

கற்பனை மறந்து
கனவுகள் துறந்து
காசு தேடும்
கலியுக வாழ்க்கை

இரத்த சொந்தம்
பணத்தில் வருவதில்லை
எந்த பந்தமும்
பணத்தால் நிலைப்பதில்லை

ஒரு கோடி
தோற்று போகும்              
ஒரு வார்த்தையின்
நம்பிக்கையில்

ஒரு வார்த்தை
மீட்டுத் தரும்
ஒரு கோடியின்
தன்னம்பிக்கையை   

போதி மரம்
மட்டுமே
புத்தனின்
இருப்பிடம் அல்ல

சாமி மடம்
மட்டுமே
போதனைகளின்
பூர்விகம் அல்ல

அறிவுரைகளை
கேட்கப் பழகு
அறநெறிகளில்
நடக்கப் பழகு

நிலையில்லாத
பொருட்களில் தேடாதே
நிலையான நிம்மதி
எங்கே என்று

உன்
வயதான அன்னைக்கு
ஒரு வாய்
அன்னமிட்டு
ஆசிகள் பெறு !


No comments:

Post a Comment