Saturday, February 12, 2011

எந்தையே - 6

காலம்
உன்னை
மறக்கச் செய்யுமோ
காலனுக்கு முன்னே

கவலை
உன்னை
நினைக்க விடாதோ
கண்ணீரில் பங்கெடுத்து

என்
இரத்தத்தில்
எழுதப் பட்டதல்லவா
உன் முகம்

உன்
இரத்ததில்
எழுப்பப் பட்டதல்லவா
என் உயிர்

வந்தவர் கண்ணீர்
அந்த கணம்
சென்றதும் நின்றது

சொந்தங்களின் சோகம்
முப்பதாம் நாள்
காரியத்தில் முடிந்தது

அன்னையின் அழுகை
எங்களின்
முகம் கண்டு
மனதோடு மறைந்தது

அண்ணனின் வருத்தம்
தம்பியின்
நம்பிக்கை தளர்ந்திட
மறுத்து சென்றது

என்
விழிகளில் கூட
அவர்களின்
சுமைகள் தான்

இருந்தும்
எங்கள் எல்லோரின்
சுவரல்லவா
நீ

உன் மீது
வரையப்பட்டது தானே
எங்கள்
வாழ்கை சித்திரம்

இன்று
தன்னந்தனியே நிற்கிறேன்
தோன்றும்
இடம் எல்லாம்
எழுதிப்பார்க்கிறேன்

யார் சொல்வார்
ஆறுதல் எனக்கு
யார் நிரப்புவார்
என் தந்தையின்
இடத்தை

என்
தன்மானத்தின்
முதல் வடிவம்
நீ

என்
தன்னம்பிக்கையின்
முழு வடிவம்
நீ

இன்று
எந்த ஒரு
இலட்சியமும் இல்லை
உன்
எண்ணங்களை தவிர

அன்று
நீ கண்ட
கனவு மட்டும்
என்
வருங்கால வாழ்க்கையாகும் !

No comments:

Post a Comment