Saturday, February 26, 2011

கா.தலைவி - 5 (ஊர் திருவிழா)

ஊர்த் திருவிழா 
ஊரெங்கும் 
உலவ வரும்     
தேர்த் திருவிழா 

கோவில் வாசலில் 
கோலாகலம் 
குடித்தன வாசலில் 
கோலத்தின் களம்
 
புத்தாடைகளில் 
சிலர் 
புன்சிரிப்புடன் 
பலர் 
 
வேலிச் சண்டை 
இல்லை 
வீட்டுச் சண்டை 
இல்லை
 
பயபக்தியோடு 
பக்தர்கள் 
படையலுடன் 
விருந்தோம்பல்

காசு பணமின்றி 
காரியங்கள் 
வலி வருத்தமின்றி 
வேலைகள்
 
உள்ளம் உருகிட 
எல்லோரும் 
ஒருநாள் மனிதர்களாய் 

எண்ணம் குளிர்ந்திட 
அனைவரும் 
ஆண்டவன் அடிமைகளாய் 

வகை வகையான 
வியாபாரிகள் 
சிகை அலங்காரமாய் 
தெரிந்தார்கள் 

வாத்திய கருவிகளின் 
இசை முழக்கம் 
வசீகர முகமாய் 
மலர்ந்திருந்தது 

கருவறை சாமியின் 
சித்தி 
பெற்றதைப் போல 
சிலிர்த்து நின்ற 
கோபுரம் 

கோபுர உச்சிவரை 
மாபெரும் 
உருவம் கொண்டதாய் 
கற்கடவுளின்
உயிர்ச் சிலை  

அணிவகுத்து 
நின்றனர் 
அணியணியாய் 
துணை கொடுத்து 
வந்தனர் 

பெரும் திரளாய் 
கூடினர்
சிறிது சிறிதாய் 
பெரியதொரு மாநாடாய்
மாறினார் 

மந்திர சத்தம் 
முழங்கியது 
மணிகளின் ஓசை 
கேட்டது 

மந்திராலோசனை 
தொடங்கியது 
முதல் மரியாதை 
யாருக்கென்று 

தேவாமிர்தமாய் 
தெய்வ தரிசனம் 
ஆலகால விடமாய்
அதிகார சதிகள்
 
சீவி சிங்கரித்து 
சாமியின் சிலை 
சிலர் ஆசைக்காக 
மூக்கறுக்கப்பட்டது

சற்று 
உற்று நோக்க 
புரிந்தது 
சுற்றி நின்றது 
சாதி சனம் 
மட்டுமே 

எட்டி நின்ற 
சிலர் 
கூடி கூடி 
பேசியது 
அடுத்த வருடம் 
நடத்தும் 
அவர்கள் விழா 
சிறக்க 

சாமி 
தேர் ஏறியது 
பக்தர்கள் 
வடம் பிடித்தனர் 

உலகாளும்
கடவுளுக்கு 
ஊர் சுற்றி 
காட்ட 

ஒருமுறை 
தெரு வாசல் 
அழைத்து 
முறை செய்து 
அனுப்ப
  
ஒற்றுமை 
என்ற பெயரில் 
பெரியதொரு 
வேற்றுமை 
அரங்கேற்றப்பட்டது !

No comments:

Post a Comment