Saturday, February 12, 2011

கா.தலைவன் - 4 (காத்திருப்பு )

எங்கு சென்றாய்
என்பதை
நான் அறியேன்

என்று வருவாய்
என்றும்
எனக்கு தெரியாது

உனக்காக நான்
தினமும்
உன் வீட்டு
தெருவில் அலைகிறேன்

ஒவ்வொரு பேருந்தையும்
விடாமல்
உற்றுப் பார்த்து
நான் களைக்கிறேன்

விழிகள்
தேடித் தேடி
ஓய்ந்தப் பின்னும்
விலகி செல்ல
மனமின்றி

உன்
பாதம் பட்ட
இடங்களை
கண்டு தவிக்கிறேன்

உன்
பார்வை பட்ட
நேரங்களை
திரும்பி பார்க்கிறேன்

மறுபடி
உன்னை சந்திப்பேனா
இல்லை
கனவாகி விடுமா
என் காதல்

உன்
உடலுக்கு நோவா
நான்
அருகில் இல்லாமல்
நொடிந்து போனாயா

ஒருமுறை
சுருக்கென்றது
உனக்கு
திருமணம் ஏதும்
நடந்திடுமோ

இதயம் வலிக்கிறது
எண்ணும் போதே
இமைகள் நனைகின்றன
என் அனுமதியின்றி

வீணடித்து விட்டேன்
நான் நாட்களை
உன்னை
கண்ட வினாடியே
சொல்லி இருக்க
வேண்டும்
என் காதலை

தன்மானம்
அன்று தடுத்துவிட்டது
அவமானம்
இன்று அரித்தெடுக்கிறது

நீ வருவாய்
என்று சொல்லும்
மனதினிடம்
என் எதிர்காலம்
தருகிறேன்

எனை நினைப்பாய்
என்று எண்ணும்
நம்பிக்கையிடம்
என் நிகழ்காலம்
தருகிறேன்

உனக்காக காத்திருக்கிறேன்
ஒவ்வொரு கணமும்
அடுத்த நாளுக்காக
ஒவ்வொரு நாளும்
அடுத்த கணத்திற்காக

எந்த நொடி
என் விழிகள்
உன்னை காணுமோ
அந்த நொடி
எது என்று
எனக்கு
யார் சொல்வது !

No comments:

Post a Comment