Tuesday, February 1, 2011

எந்தையே - 5

குல தெய்வம்
என்று
கும்பிடச் சொன்னாய்

ஒவ்வொரு
வெள்ளிகிழமையும்
விநாயகரை
வழிபடச் சொன்னாய்

புரட்டாசி
மூன்றாம் சனி
திருப்பதி
தரிசனம் காட்டினாய்

பிடிவாதமாய்
பழனி முருகனுக்கு
மொட்டை
போடச் சொன்னாய்

எல்லா
ஞாயிற்று கிழமையும்
இராகுகால பூசையில்
பங்கேற்கச் சொன்னாய்

குரு பெயர்ச்சிக்கு
சிவன் கோவிலை
வலம்
வரச் சொன்னாய்

சனி பெயர்ச்சிக்கு
சனிச்வரனை
வணங்கி
அருள்பெறச் செய்தாய்

ஊர்
மாரியம்மனுக்கு
தீமிதி
திரு விழா

ஒரு
பண்டிகை தவறாமல்
படையல்
வீட்டு சாமிகளுக்கு

சுற்றுலா என்றால்
மதுரை
மீனாட்சி அம்மன்
கோவில்

விரதம் என்றால்
கார்த்திகை
சுவாமி மலை
முருகனுக்கு

நல்ல நேரம்
பார்த்து
நடக்கச் சொன்னாய்

நல்ல சகுனம்
பார்த்து
போகச் சொன்னாய்

கருடனுக்கு கூட
கன்னத்தில் இட்டு
கும்பிடு
போடச் சொன்னாய்

பிறர்மீது கூட
பாதம் பட்டால்
தொட்டு
வணங்கச் சொன்னாய்

உன் காலில்
மட்டும்
ஒரு முறை
கூட
விழச் சொன்னதில்லை

உன் முகம்
கண்டு
ஒரு முறை
கூட
தொழச் சொன்னதில்லை

என் தந்தையே
உனக்காக
நான்
மொட்டை அடித்தேன் 
தெரியுமா

உன் உடல்
முன்னே
நான்
விழுந்து வணங்கியதை
அறிவாயா

இன்று
ஒவ்வொரு அமாவாசையும்
உனக்கென
நான் விரதமிருகிறேன் !

No comments:

Post a Comment