Monday, July 18, 2011

எந்தையே - 29

உன்
இறுதி காலங்கள்
என்னை
இம்சை  செய்கிறது 

உன் 
கந்தல் கோலங்கள்
என்னை
கண்ணீரில் நனைக்கிறது 

என்
சம்பாத்தியத்திற்கு பின்னும்
உனக்கு 
சந்தோசம்  இல்லை

நீ
நிம்மதி அடைந்திடும்
வண்ணம்  -  நான்
தலையெடுக்க  வில்லை

தலை வாரிட
நேரம் இன்றியும்
உடை மாற்றிட
உள்ளம் இன்றியும்

தனி ஒருவனாக
நின்று
தாங்கிய வலிகள்
சாமானியர்கள் சரித்திரம்

பெற்ற பிள்ளைகளின்
வாட்டம் அன்றோ
உன்னை
வாட்டி வதைத்தது

உற்ற சொந்தங்களின்
உதாசீனம் அன்றோ
உன்னை
உருக்குலைத்து விட்டது

முதல்
இரு பொத்தான்கள்
திறந்து கிடக்கும்
மறந்த  கோலம்

மீசையின்
நரை முடிகளை
கடித்து  நிற்கும்
கடந்த  காலம்

கை பேசியை
கழுத்தில்
மாட்டி கொண்டு
மகிழ்ந்த நேரம்

கடிகாரத்தை
கையில்
கட்டிக் கொண்டு
கலக்கிய கம்பீரம்

எப்படியாவது
மீட்டுவிட எண்ணிய 
உன்
இளமைகால இதிகாசம்

சகோதரர்களிடமும்
சமுதாயத்திடமும்
முடித்திட துடித்த
உன் வனவாசம்

இரத்த அழுத்தத்தில்
உணர்ந்து கொண்டேன்
நீ
எத்தனை இன்னல்கள்
சுமந்தவன் என்று

இதயம் வெடித்ததும்
கனன்று நின்றேன்
நான்
இத்தனை சின்னவனாய்
இருந்தேனே என்று

என்றாவது ஒருநாள்
உன்னை
இன்னல் கலைந்த
இன்முகத்துடன் காண

எந்நேரமும் என்னை
சிந்தனையில்
இருத்திக் கொண்டு
சிடுசிடுத்தேன் உன்னிடம்

என்ன
சொல்வதென்று புரியாமல்
உனக்கு
ஒரு துன்பமும்
தரமாட்டேன் என்றாயே

இன்று
உன்னையே இழந்துவிட்டு
இன்னமும்
உன் கடனடைக்க
கண்ணீருடன் பணியாற்றுகிறேன் !

1 comment:

  1. Nanba sila sohangal nammodu mattum pohattumee...please...

    ReplyDelete