Thursday, March 10, 2011

நானும் என் அழுகையும்

அழுகை தான் 
நான் 
உலகில் பேசிய 
முதல் மொழி 

அன்னையின் மடியில் 
அடம் பிடித்தேன் 
கண்ணீரை கொண்டு 
காரியம் சாதித்தேன் 

தந்தையின் பிடியில் 
தஞ்சம் அடைந்தேன் 
கண்களை கசக்கி 
தட்சணை பெற்றேன் 

குருவின் கோபத்தில் 
குறுகி நின்றேன் 
அச்சத்தில் அழுது 
ஆறுதல் பெற்றேன் 

ஆண்டவன் ஆலயத்தில் 
அர்ச்சனை செய்தேன் 
அழுது அழுது 
அருள்பாலிக்க சொன்னேன் 

இளைஞன் ஆனதால் 
எனக்கு நானே 
அழுது கொண்டேன் 
இருந்தும்
காதல் கொண்டதால்
கண்கள் குளமாகின

செய்யும்
தொழில் சிறக்க
அழுததுண்டு
தொழிலில்
பணம் பெருக
கண்ணீர் விட்டதுண்டு

பிள்ளைகளுக்காக
அழுதேன் - அவர்களை
பெரியவர்கள் ஆக்க
அழுதேன்

தொல்லைகளுக்காக
அழுதேன் - அவைகளை
தொலைத்து கட்ட
அழுதேன்

ஓய்வு
பெற்றப் பின்னும்
அழுதேன்
ஓயாத பசிக்காக

ஒருவாய்
உண்டப் பின்னும்
அழுதேன்
ஊசலாடும் உயிருக்காக

இறுதியாக அழுதேன்
இறந்த பின்
சுற்றி நின்றவர்கள்
கண்களின் வழியாக

இன்னமும் அழுகிறேன்
எஞ்சி நிற்கும்
என் நினைவுகளின்
கனவுகள் அழியாமல் !   
 

No comments:

Post a Comment