Wednesday, April 27, 2011

எந்தையே - 13

ஒரு 
விடியல் 
நீ எனக்கு 

ஒரே 
விடியல் தான் 
நான் உனக்கு
 
உன்
தொலை நோக்கு 
இலட்சியப் பார்வையின்
விலைமிக்க 
கண்ணாடி நான் 

என்னை 
அடிக்கடி துடைத்து 
அழகு செய்து 
அணிந்து பார்ப்பாய்
 
ஒருமுறையாவது 
உன் 
இலக்கை 
எட்டிவிடுகிறதா என்று
 
தன்னை தானே 
சுத்தப்படுத்திக் கொண்டு 
உன் சுமையை 
குறைக்க எண்ணினேன்
 
இருந்தும் 
இளமையில் பழுப்பேறி 
இயலாமல் அழுக்கேறி 
இன்றும் 
துடைத்துக் கொண்டே 
இருக்கிறேன் 

பொறுத்து பார்த்தாய் 
புலம்பி பார்த்தாய் 
புரியாமல் 
வெறுத்துப் பார்த்தாய் 

உன் கண்ணின் 
ஒளி மங்கும் 
காலத்தில் 
ஒருநொடி யோசித்தேன் 

இந்த கண்ணாடி 
நீ 
உலகை காணவாவது
உதவுமா  என்று 

எதிர் பாராத 
நேரத்தில் 
எதையும் 
எதிர் பார்க்காமல் 

என்னை 
தனியே 
விட்டு விட்டு 
சென்றவரே 

ஒருநாள் 
உன் இலட்சிய 
இலக்கை 
நிச்சயம் எட்டும் 

இந்த 
மூக்கு கண்ணாடி 
உலகின் 
கண்களுக்கு முன்னாடி   
 
அன்று 
யாருக்கும் பொருந்தாத 
இந்த கண்ணாடி 
ஒரு 
தொலைநோக்கியாகத்  தான்   
வாழும் 

தன்
இரண்டு விலைமிக்க
கண்ணாடி கரங்களையும் 
ஒன்றாக்கி 
உன்னை வணங்கியபடியே !

1 comment:

  1. arumai yana uvamai
    உன்
    தொலை நோக்கு
    இலட்சியப் பார்வையின்
    விலைமிக்க
    கண்ணாடி நான்

    ReplyDelete